இர்மா புயல் பாதிப்பு: அமெரிக்காவில் 3 பேர் பலி

இர்மா புயல் தாக்கியதில் அமெரிக்காவில் 3 பேர் பலியாகி உள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அட்லாண்டிக் கடலில் உருவான இர்மா புயல் கரீபியன் தீவுகளை பதம் பார்த்தது. இதைதொடர்ந்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை நேற்று தாக்கியது. இதனால் அங்கு பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இர்மா புயல் தாக்கத்தால் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. புயல் தாக்கியதில் அமெரிக்காவில் 3 பேர் பலியாகினர்.
இந்நிலையில், இர்மா புயல் பாதிப்பில் சிக்கியுள்ள அமெரிக்கர்களுக்காக சேவா இண்டர்நேஷனல் என்ற தன்னார்வ  அமெரிக்கவாழ் இந்திய அமைப்பினர் சார்பில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பு அட்லாண்டா மாகாணத்தில் ஏற்படுத்திய நிவாரண முகாம்களில் சுமார் 300 குடும்பத்தினர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோல், மற்றொரு தன்னார்வ அமைப்பு ஏற்படுத்தியுள்ள நிவாரண முகாம்களில் சுமார் 2,000 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அட்லாண்டாவில் உள்ள 4 கோயில்களும் திறக்கப்பட்டு புயல் பாதிப்பில் சிக்கியுள்ள புளோரிடா மாகாண பொதுமக்கள் தங்கி கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

அட்லாண்டாவில் உள்ள இந்திய தூதரகம் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புயல் பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உடனடி உதவியளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 

ஏற்கனவே அமெரிக்காவின் கீழ் பகுதியில் உள்ள கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளை தாக்கி துவம்சம் செய்து 25 உயிர்களை  பறித்த இர்மா புயல் தற்போது புளோரிடாவுக்குள் நுழைந்துள்ளதால் அங்கு பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது.

ஹவானா பகுதியை பதம் பார்த்த பின்னர் முன்பைவிட மேலும் சற்று வலுவடைந்து நான்காம் எண் எச்சரிக்கையுடன் கியூபாவை கடந்து,  புளோரிடா மாநிலத்தை தாக்கிக் கொண்டிருக்கும் ‘இர்மாவின்’ புயல் படிப்படியாக நகர்ந்து ஜார்ஜியா, கரோலினாஸ் மாகாணங்களையும் அடுத்த வாரம் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏராளமான விமானங்கள், ஹெலிகாப்டர்கள், மீட்பு படகுகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நீச்சல் வீரர்கள் மற்றும் மீட்பு படையினரும் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

புளோரிடா மாநிலத்தின் கடலோர பகுதிகளில் வாழும் சுமார் 70 லட்சம் மக்களை தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அமெரிக்காவின் பேரிடர் மற்றும் அவசரக்கால நிவாரண முகமை வலியுறுத்தி உள்ளது. நிவாரண முகாம்களில் சுமார் 2 லட்சம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

சுமார் 2 லட்சம் வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள இந்த மாநிலத்தில் அமெரிக்க இந்தியர்கள் அதிக அளவில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

புயல் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இர்மா புயல் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என மக்களை எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், “புயல் பாதிப்பு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறி இருப்பார்கள் என நம்புகிறேன். புயல் பாதிப்பில் இருந்து மீண்டுவர ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்வார்கள் என நம்புவதாக” தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment