கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவ வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நிபா எனும் அரிய வகை வைரஸ் மக்களை மிரட்டி வருகிறது. வவ்வால்கள் மூலம் பரவும் இந்த வைரஸ் தாக்கி கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் ஒரு செவிலியர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளவை அச்சுறுத்தும் நிபா வைரஸால் தமிழக மக்களும் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் பா வைரல் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை தலைமை செயலகத்தில் விளக்கம் அளித்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளரான ராதாகிருஷ்ணன் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் காய்ச்சல் குறித்து கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது குறித்து தமிழக மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. நீலகிரி, கோவை உள்ளிட்ட கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் கூடுதல் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் வைரஸ் பாதிப்பை தடுக்கலாம். தொடர்ந்து கண்காணிக்கும் படி பொது சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களை கண்காணிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரள- தமிழக எல்லைப் பகுதிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளது. பன்றிகள், பழம் தின்னும் வவ்வால்களால் நிபா வைரஸ் பரவி வருகிறது. தமிழக எல்லைப்புறப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.