பாரதிராஜாவுக்கு உயர் நீதிமன்றம் குட்டு!

ஒவ்வொரு நாளும் புதுசு புதுசாக  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு, அவர் பெற்ற முன் ஜாமீன் நிபந்தனை உத்தரவை நிறைவேற்ற நேரமில்லையா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த ஜனவரி 18-ம் தேதி சென்னையில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, இந்து கடவுளான விநாயகரை இறக்குமதி கடவுள் என்று விமர்சித்ததுடன், ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் பேசினார்.

ரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய பாரதிராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்தார்.

இந்தப் புகாரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரதிராஜா தாக்கல் செய்த மனுவை மே 23-ம் தேதி விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம் நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி இயக்குனர் பாரதிராஜா மூன்று வாரங்களுக்கு வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டதுடன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியவில்லை என்றும், எனவே முன் ஜாமீன் உத்தரவைப் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென புதிய மனுவை பாரதிராஜா தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக இயக்குநர் பாரதிராஜா பற்றிய செய்திகள் வருகின்றன. அதற்கெல்லாம் செல்ல முடிந்த அவரால் நீதிமன்ற உத்தரவினை நிறைவேற்ற முடியவில்லையா? நிவாரணம் தேடி நீதிமன்றம் வரும்போது அதன் நிபந்தனைகளை ஏன் நிறைவேற்ற முடியவில்லை? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், கால நீட்டிப்பு கோரி கூடுதல் மனுவாக தாக்கல் செய்யாமல் புதிய மனுவாக தாக்கல் செய்ததும் தவறு என்பதை சுட்டிக்காட்டினார். இதற்கிடையில் புகார்தாரர் நாராயணன் பாரதிராஜாவின் மனு மீதான கால அவகாசம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் புதிய மனுவை தாக்கல் செய்துள்ள பாரதிராஜாவுக்கு, கால அவகாசம் வழங்க ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பதில் மனுவைத் தாக்கல் செய்ய நாராயணனுக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஜூலை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related posts

Leave a Comment