ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் எமி ஜாக்சன் ஹீரோயினாகவும், அக்ஷய் குமார் வில்லனாகவும் நடித்துள்ளனர். ஏற்கெனவே ரிலீஸான ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது எடுக்கப்பட்டுள்ளது. ‘எந்திரன்’ என்ற தலைப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தர மறுத்ததால், ‘2.0’ என இரண்டாம் பாகத்துக்குத் தலைப்பு வைத்தனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட் செய்துள்ளார். தமிழ் மற்றும் இந்தியில், 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் ஜெயமோகனும், இந்தியில் அப்பாஸ் டயர்வாலாவும் வசனம் எழுதியுள்ளனர்.
கடந்த ஆண்டு இறுதியில் இந்தப் படம் வெளியாகும் என முதலில் கூறப்பட்டது. பின்னர், குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்றனர். பின்னர், அதையும் மாற்றி ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்றனர். இறுதியில் அதையும் மாற்றி, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். ‘2.0’வுக்குப் பதிலாக ‘காலா’வை முதலில் ரிலீஸ் செய்தனர். இதற்கெல்லாம் காரணம், திட்டமிட்டபடி கிராபிக்ஸ் பணிகள் முடியாதது தான்.
இந்நிலையில், விரைவில் பணிகளை முடித்துத் தர கிராபிக்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், எனவே நவம்பர் 29-ம் தேதி படம் ரிலீஸாகும் எனவும் ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் ஷங்கர். எனவே, ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.