கம்யூனிஸ்ட் கட்சியில்தான் இணைய போவதாக வெளியான தகவலில் உண்மை இல்லையென நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா தெரிவித்துள்ளார்
சத்யராஜ் மகள் என்ற அடையாளத்தை தாண்டி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் அவரது மகள் திவ்யா. இவர் ஒரு பிரபலமான ஊட்டச்சத்து மருத்துவர். மருத்துவ உலகில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடிக்கு முன்பு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது சேவை உள்ளத்தை கருத்தில் கொண்டு பெங்களூருவை மையமாக
வைத்து செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘அக்ஷய பாத்திரம்’ அமைப்பு திவ்யாவை தூதராக நியமித்தது.

இதனிடையே இவர் சினிமாவில் நடிக்கப் போவதாக செய்திகள் பரவியது. அதற்கு விளக்கம் கொடுத்த திவ்யா, ”நான் சினிமாவில் நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதில் உண்மை இல்லை. சினிமாவுக்கு வரும் எண்ணமில்லை” என்று தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய திவ்யா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத்தலைவர் நல்லக்கண்ணு குறித்து புகழ்ந்து பேசினார். இதனால் திவ்யா கம்யூனிஸ்ட் கட்சியில் இணையப் போவதாக செய்திகள் பரவத்தொடங்கின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், ” மனதால் நான் ஒரு கம்யூனிஸ்ட். கம்யூனிஸம்தான் சமத்துவத்தைக் கட்டமைக்கும், சுரண்டலைத் தடுக்கும். எனக்கு நல்லகண்ணு அய்யாவைப் பற்றி நன்கு தெரியும். அவர் ஒரு அரசியல் தலைவர் எவ்வாறு எளிமையுடனும் சுயமரியாதையுடனும் வாழவேண்டும் என்பதற்கான உதாரணம். சாதிகள் அற்ற சமூகத்தின் கொள்கைகளுக்காக, எதையும் தியாகம் செய்யக்கூடியவர் அவர். இப்போதைக்கு என்னுடைய நோக்கம் ‘அக்ஷய பாத்திரம்’ மதிய உணவுத் திட்டம் மூலம் தமிழகத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகளுக்குப் போதுமான சத்துள்ள உணவை கிடைக்கச் செய்வதே” என்று தெரிவித்துள்ளார்.
