பாமக நிறுவனர் ராமதாஸின் முத்துவிழாவில் காடுவெட்டி குரு மகன் கனலரசன் தனது தாயாருடன் கலந்துகொண்டார்.
வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மறைவுக்குப் பிறகு தைலாபுரம் தோட்டத்திற்கும் குருவின் உறவினர்களுக்கும் இடையே வெளிப்படையாக மோதல் வெடித்தது. பாமக தலைமையின் எதிர்ப்பையும் மீறி குருவின் மகள் விருதாம்பிகை, தனது அத்தை மகன் மனோஜை கடந்த நவம்பர் 28ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு குருவின் மகன் கனலரசன் மற்றும் குருவின் சகோதரிகள், பாமக தலைமை மீது கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.
கடந்த டிசம்பர் மாதம் காடுவெட்டியில் நடைபெற்ற குரு மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவில் குருவின் குடும்பத்திலிருந்து அவரது மனைவி சொர்ணலதா தவிர யாரும் கலந்து கொள்ள வில்லை. மக்களவைத் தேர்தல் சமயத்திலும் கூட பாமகவுக்கு எதிரான நிலைப்பாட்டையே குரு குடும்பத்தினர் எடுத்திருந்தனர்.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸின் 80ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 25ஆம் தேதி சென்னை திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் அரங்கில் முத்துவிழா நடைபெற்றது. அதில் ராமதாஸை கடுமையாக எதிர்த்துவந்த குருவின் மகன் கனலரசன் கலந்துகொண்டது பாமகவினர் மத்தியிலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. விழாவில் ராமதாஸின் காலில் கனலரசன் விழுந்து ஆசி பெறுவது போன்ற புகைப்படமும், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்டோருடன் சிரித்தபடி போஸ் கொடுப்பது போன்ற புகைப்படமும் பாமகவினரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
இதுதொடர்பாக கனலரசனை தொடர்புகொண்டு பேசினோம். “அய்யா அழைத்தார். அதனால் என் அம்மாவுடன் சென்று முத்துவிழாவில் கலந்துகொண்டேன்” என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார். இதனால் குருவின் குடும்பத்தினருக்கும் பாமக தலைமைக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டதா என்று பாமகவினர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் குருவின் மகள் விருதாம்பிகையின் கணவரான மனோஜோ, முத்துவிழாவில் கனலரசன் கலந்துகொண்டது குறித்து தனக்கு தெரியாது என்கிறார்.