ராதாபுரம் மறுவாக்கு ரிசல்டை ரிலீஸ் செய்ய சுப்ரீம் கோர்ட் தடை!

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரை, திமுக சார்பில் அப்பாவு ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இந்த முடிவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு தாக்கல் செய்த மனுவில், தபால் மூலம் பதிவான 203 வாக்குகளை அதிகாரிகள் எண்ணவில்லை என குறிப்பிட்டிருந்தார். 19, 20 மற்றும் 21 ஆவது சுற்றுகளை எண்ணும்போது காவல்துறையினர் தங்களை வெளியேற்றி விட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தபால் வாக்குகள் மற்றும் 3 சுற்று வாக்குகளின் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.ஏ இன்பத்துரை அவசர மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் இன்பதுரையின் வழக்கு 64-வது எண்ணாக பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்தது.

மூத்த நீதிபதி அருண் மிஸ்ரா, ரவீந்திராபட் அமர்வு முன் விசாரணைக்கு வந்த வழக்கில் இன்பதுரை சார்பில் முகுல் ரோத்தகி ஆஜராகி, வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்கவேண்டும் என வாதிட்டார். ஆனால் மறுவாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்கமுடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

வாக்கு எண்ணிக்கை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட வருகிற 23 வரை இடைக்காலத் தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதுகுறித்து விளக்கமளிக்க அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related posts

Leave a Comment