மகாராஷ்ட்ராவில் அதிரடி திருப்பமாக, பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச் சராக மீண்டும் பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைப்பது குறித்து கடந்த ஒரு மாதமாக நிலவிய இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கூட்டணி ஆட்சியமைப்பது குறித்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இடையே பல்வேறு கட்டங்களாக பேச்சுக்கள் நடந்த நிலையில், மும்பையில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 3 கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு பின் நேற்று பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராக ஏற்பதில் 3 கட்சிகள் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
3 கட்சிகளின் சார்பில் மும்பையில் செய்தியாளர் சந்திப்பு நடக்க உள்ளதாகவும் இதில் ஆட்சியமைப்பது தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் சரத் பவார் கூறியிருந்தார்.
இச்சந்திப்புக்கு பின் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும் கூட்டணி ஆட்சி தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தார். இதனால், உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்பார் என்று உறுதியாக நம்பப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சராக, பாஜவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் இன்று காலை பதவியேற்றுள்ளார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவார் துணை முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த திடீர் திருப்பம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சராகப் பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித் துள்ளார்.
”மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சராகப் பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸுக்கும் துணை முதலமைச்சராகப் பதவியேற்ற அஜித் பவாருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தின் எதிர்காலத்துக்காக அவர்கள் விடாமுயற்சி யுடன் பணியாற்றுவார்கள் என்று நம்புகிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.