மீடியா, மக்கள், விமர்சகர்கள் என அனைவர் மனதையும் கொள்ளையடித்த “சில்லுக்கருப்பட்டி” !

கடந்த பல வருடங்களில் பல புதிய பரிசோதனை முயற்சிகளை நிகழ்த்தி திரையில் சாதனை படைத்து வந்திருக்கிறது  தமிழ் சினிமா. ஆனால் ஆந்தாலஜி எனும் வகை தமிழ்சினிமாவில் பலகாலமாக முழுமையாக நிகழாமல் இருக்கிறது. இந்த வகை படங்களை ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின்  ராம் கோபால் வர்மாவின்  ‘தர்னா மானா ஹை முதல் பாம்பே டாக்கீஸ்’ வரை கொண்டாடி தீர்க்கும் தமிழ் ரசிகர்கள் தமிழிலும் இது போல் படம் எப்போது நிகழும் எனும் ஏக்கத்தில் இருந்தனர். அவர்களின் ஏக்கத்தை துடைத்து அனைவரும் கொண்டாடும் ஒரு படைப்பாக வந்திருக்கிறது ஹலிதா சமீமின் “சில்லுக்கருப்பட்டி”. ஆந்தாலஜி முறையில் நகர பின்னணியில் அன்பை பேசும் நான்கு கதைகளை சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது “சில்லுக்கருப்பட்டி”. பத்திரிகை முன் திரையீடுகளில் நேர்மறை விமர்சனங்களால் பாராட்டை குவித்த “சில்லுக்கருப்பட்டி” படம் இப்போது நகரம் மட்டுமல்லாது தமிழகம் முழுதும் அதிகளவு திரையரங்குகளில் வெளியாகி பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது. மேலும் ரசிகர்களின் மனங்களை கவர்ந்திழுத்து சிறந்த படமென்கிற பெயர் பெற்றிருக்கிறது. சூர்யாவின் 2D Entertainment மற்றும் Sakthi film factory signature release ஆகியோரின் மிகப்பெரும் ஆதரவில் “சில்லுக்கருப்பட்டி” முத்திரை திரைப்படமாக மிகப்பெரும் எண்ணிக்கையிலான திரையரங்கில் 27.12.2019 அன்று வெளியாகியுள்ளது.

நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் ரசிகர்களிடம் சிவப்பு கம்பள வரவேற்பு பெற்று  வருவது குறிப்பிடதக்கது. 2019 வருடம் அப்படி நிறைய நல்ல கதையம்சம் உள்ள படங்களை தந்துள்ளது. முத்தாய்ப்பாக இந்த வருடத்தின் இறுதியில்  ஹலிதா சமீமின் “சில்லுக்கருப்பட்டி” ஒரு சிறந்த படமாக அருமையான கதையம்சம் கொண்ட படமாக வந்திருக்கிறது. ஹலிதா சமீம் கதை சொல்லியிருக்கும் விதத்திலும்  ஒவ்வொரு பாத்திரத்தை உருவாக்கியிருக்கும் விதத்திலும்  இயல்பை மீறாத நேர்த்தியான படைப்பாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இப்படத்தின் நான்கு கதைகளும் நான்கு விதமாக, நகரின் முடுக்குகளில் வாழும் மனிதர்களின் உறவை, அன்பின் அவசியத்தை பேசுவதாக அமைந்திருக்கிறது. “ஹே அம்மு“ நகரின் அடுக்கு மாடியில் வாழும் தம்பதியின் உறவை சொல்கிறது. பணியில் பரபரப்பாக இருக்கும் கணவன்( சமுத்திர்கனி) வீட்டில் தனிமையில் உழழும் மனைவி ( சுனைனா ) இருவரின் இடையேயான உறவுச் சிக்கலை அவர்களின் அன்பு வெளிப்படுவதை அழகான கதையாக சொல்கிறது. “பிங்க் பேக்” சமூகத்தின் இருவேறு அடுக்கில் வாழும் வளர் இளம் சிறுவர்களிடையே உருவாகும் அன்பை அழகாக சொல்கிறது. இன்னொருபுறம் “காக்கா கடி” எனும் கதையில் மீம் கிரியேட்டர் ஒருவனுக்கும் (மணிகண்டன்) உடை வடிவமைக்கும் மாடர்ன் பெண்ணுக்கும் (நிவேதிதா சதீஸ்) இடையே நிகழும் காதலை அழகான தருணங்களை சொல்கிறது. “டர்டிள் வாக்” எனும் கதை முதிய வயதில் இருக்கும் இருவருக்குள் ( ஶ்ரீராம் , லீலா சாம்சன் ) ஏற்படும் உறவை சொல்கிறது.

வாழ்வின் இயல்பை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் இப்படைப்பு வெகு அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்களால் மாயாஜாலத்தை திரையில் நிகழ்த்தியிருக்கிறது. அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்தி, யாமினி ஞானமூர்த்தி ஆகிய நான்கு கலைஞர்களின் ஒளிப்பதிவும் பிரதீப் குமாரின்  அற்புத இசையும் படத்தை ஒரு பேரனுபவமாக மாற்றியிருக்கிறது.

Divine Productions சார்பில் படத்தை தயாரித்திருக்கும் வெங்கடேஷ் வேலினேனி படத்திற்கு கிடைத்திருக்கும் உற்சாக வரவேற்பில் பெரும்  மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். மேலும் சில்லுக்கருப்பட்டி போன்று உலக ரசிகர்கள் அனைவரையும் கவரக்கூடிய நேர்த்தியான படைப்புகளை Divine Productions தொடர்ந்து தரும் என்றார்.

Related posts

Leave a Comment