குஜராத் மாநிலத்தில் 3 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே ராஜினாமா செய்து பா.ஜனதாவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர். வாக்குப்பதிவு நடைபெற்ற போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவர், தாங்கள் பதிவு செய்த வாக்குச்சீட்டை பா.ஜ.க தலைவரிடம் காண்பித்தனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த காங்கிரஸ், கட்சி மாறி வாக்களித்த எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் வாக்கை செல்லாது என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது. அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறது.
இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் குவிந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் தேர்தல் ஆணையத்தில் சென்று முறையிட்டனர்.
இதையடுத்து வாக்குப்பதிவின் முழுமையான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்காக மத்திய மந்திரிகள் பலரும் அலுவலகத்தின் வாசலில் காத்து கிடந்தனர்.
வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், கட்சி மாறி பா.ஜ.க.வுக்கு வாக்களித்த 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் நள்ளிரவு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதில், காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் தனக்கு தேவையான 44 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இரானி ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். அகமது பட்டேலுக்கு நெருக்கடி கொடுத்த காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்து பா.ஜ.க.வில் போட்டியிட்ட ராஜ்புட்டுக்கு 38 வாக்குகள் கிடைத்தது.
அகமது பட்டேலின் வெற்றியை காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வெற்றி குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த அகமது பட்டேல் “வாய்மையே வெல்லும்” என்று குறிப்பிட்டு இருந்தார். சில எம்.எல்.ஏ.க்களை மட்டுமே பா.ஜ.க.வால் விலைக்கு வாங்க முடிந்ததாக தனது பேட்டியில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.