அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோவில்

மனிதர்களின் ஆயுளை நிர்ணயிக்கும் சனிபகவான் யந்திரம் பொறித்த, சிவலிங்க வடிவில் அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோவிலில் காட்சியளிக்கிறார்.
🌿 மூலவர் : எந்திர சனீஸ்வரர்🌿 தீர்த்தம் : பாஸ்கர தீர்த்தம்🌿 பழமை : 500 வருடங்களுக்கு முன்🌿 ஊர் : ஏரிக்குப்பம்🌿 மாவட்டம் : திருவண்ணாமலை
தல வரலாறு :
🌷 பல ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவர் இங்கு சனீஸ்வரருக்கு கோவில் எழுப்ப விரும்பினார். சனீஸ்வரர், சிவலிங்கத்தின் பாண வடிவிலேயே சிலை அமைத்து, கோவில் எழுப்பினார். பல ஆண்டுகள் ஆனதால் கோவில் அழிந்தது. ஆனால் சுவாமி சிலை மட்டும் திறந்தவெளியில் இருந்தது.
🌷 பின்பு சுவாமியைக் கண்ட பக்தர்கள் சுவாமி இருந்த இடத்தில் கோவில் எழுப்பினர். எந்திரங்களுடன் இருப்பதால் இவருக்கு எந்திர சனீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவானை சிலை வடிவில் பார்த்திருப்போம். ஆனால் ஏரிக்குப்பத்தில் சனிபகவான் யந்திரம் பொறித்த, சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.
தலபெருமை :
🌷 மூலஸ்தானத்தில் தாமரை பீடத்தின் மீது, இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் அமைந்த சிவலிங்க அமைப்பில் சனீஸ்வரர் காட்சியளிக்கிறார். சிலையின் உச்சியில் சிவனைப் போலவே சு+ரியனும், சந்திரனும் உள்ளார்கள். அவர்களுக்கு நடுவில் சனிபகவானின் வாகனம் காகம் இருக்கிறது.
🌷 லிங்க பாணத்தின் மத்தியில் அறுகோண அமைப்பிலுள்ள ஷட்கோண எந்திரம் உள்ளது. இச்சிலையில் நமசிவாய என்னும் சிவமந்திரம், பீட்சாட்சர மந்திரம், லட்சுமிகடாட்ச மந்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
🌷 கோவிலைச் சுற்றிலும் வயல் வெளிகள் அமைந்துள்ளன. கோவில் முகப்பில் ஐந்து காகங்கள் பு+ட்டிய தேரில், சனீஸ்வரர் வருவது போன்ற சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சன்னதியின் முற்பகுதியில் மண்டபத்தின் மேல்புறம் வாகனத்துடன் கூடிய நவக்கிரகங்கள் ஓவிய வடிவில் காட்சியளிக்கின்றனர்.
🌷 சிவனுக்கு உகந்த வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறப்பு. கோவில் அருகேயுள்ள வயலின் மத்தியில் பாஸ்கர (சு+ரியன்) தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. அந்த தீர்த்தத்தை பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகிறார்கள்.
பிரார்த்தனை :
🌷 சனிப்பெயர்ச்சியால் உண்டாகும் தோஷம் நீங்கவும், ஜாதக ரீதியாக சனி நீச்சம் பெற்றவர்களும் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க, வழக்குகளில் வெற்றி பெற இங்கு வழிபடுகிறார்கள்.
🌷 சனிபகவான் மனிதர்களின் ஆயுளையும், தொழிலையும் நிர்ணயம் செய்பவராக இருக்கிறார். எனவே, நீண்ட ஆயுளுடன் இருக்கவும், தொழில் சிறக்கவும் சனீஸ்வரருக்கு எள் தீபமேற்றி வேண்டிக் கொள்கின்றனர்.