’காலம் யாருக்காகவும் காத்திருக்காது’ என்ற பழமொழி அனைவரது வாழ்வுடனும் ஒத்துப்போகும் ஒன்று. இதனை அடிப்படையாகக் கொண்டு உருவான விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம்தான் ‘சிக்னல் அட் 11.30’. அலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி இணைந்து வழங்கும் இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். உணர்வுப்பூர்வமாகவும் தீவிரமான கதைக்களத்துடனும் உருவான இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமீபத்தில் சென்னையிலுள்ள ஒரு பிரபல கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.
இதுகுறித்து தயாரிப்பாளர்கள் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி கூறியதாவது,
“‘சிக்னல் அட் 11.30’ படத்தின் கதை கேட்டதுமே எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. மிக சாதாரணமாக இந்தப் படத்தின் கதை கேட்க ஆரம்பித்து, பின்பு மறக்க முடியாத பயணமாக இது மாறியது. இந்தக் கதையில் கதாநாயகன் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கதாநாயகனுக்குரிய தோற்றத்துடன், ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒருவரை நாங்கள் எதிர்பார்த்தோம். எங்கள் எதிர்பார்ப்பிற்கு சந்தோஷ் பிரதாப் சரியாக பொருந்தி போனார். படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுமட்டுமல்லாது பவ்யா திரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்ட திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. தொழில்நுட்பக் குழுவினரின் திறமையான உழைப்பு இந்த கதையை முழுமையான திரை அனுபவமாக உயர்த்தியுள்ளது. இசையமைப்பாளர் டி. இமான் கதையில் மிகவும் ஈடுபாடு காட்டியதோடு அற்புதமான இசையையும் கொடுத்துள்ளார். அவரது இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரும் பலம்” என்றனர்.
படத்தின் தலைப்பு குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான மலர்விழி நடேசன் கூறியதாவது, “அதுபற்றி இப்போதே விரிவாக சொல்வது கதையின் ஸ்பாய்லராக இருக்கலாம். இரவு 11.30 மணிக்கு ஒரு சிக்னலில் கதாநாயகனுக்கு நேரும் எதிர்பாராத சம்பவம் அவரது வாழ்க்கையின் திசையை எப்படி மாற்றுகிறது என்பதே கதையின் மையக்கரு” என்றார்.
இப்படத்திற்கு ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவை செய்திருக்க, படத்தொகுப்பை ஆர். கலைவாணன் கவனிக்கிறார். ஷெரீஃப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.
