மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations ) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டுள்ளார்.
யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடிக்க, ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக் களங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios), ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட தொடர் வெற்றிப் படங்களுக்குப் பிறகு, தனது 7-வது தயாரிப்பாக இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
‘ஜமா’ படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த பாரி இளவழகன், இப்படத்தில் கதை மற்றும் திரைக்கதை எழுதி இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன், இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக், முதல் பார்வையிலேயே கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுவில், ரத்தக் கறைகள் படிந்த உடையுடன் மணமகன் கோலத்தில் நிற்கும் பாரி இளவழகன், அதற்கு நேரெதிராக வெள்ளை உடையில் கையில் மலர்க்கொத்து ஏந்தி புன்னகையுடன் மணகமகள் கோலத்தில் நிற்கும் ரம்யா ரங்கநாதன், என இருவரும் கல்யாண கோலத்தில் இருக்க, அவர்களைச் சுற்றியுள்ள கதாபாத்திரங்கள் காட்டும் பலவிதமான முக பாவனைகள், பறக்கும் பல பொருட்கள் என எல்லாம் இணைந்து, இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஜாலியான ஃபேமிலி என்டர்டெயினர் என்பதை உறுதி செய்கின்றன.
படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்திருக்க, ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். மக்கள் தொடர்பை யுவராஜ் கையாள்கிறார்.
சென்னையின் பெரம்பூர் பகுதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், சம்மர் வெளியீட்டுக்காக தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெகு சமீபத்தில் தொடங்கிய படப்பிடிப்பை குறுகிய காலத்திலேயே முழுமையாக முடித்து அசத்திய படக்குழு, தற்போது டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

