‘காதல் ரீசெட் ரிப்பீட்’ – நல்ல மனம் கொண்ட சாதாரண மனிதனின் கதை – இயக்குநர் விஜய்
மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ் ( Mali & Manvi Movie Makers) – டி ஸ்டுடியோஸ் ( D Studios) -டென்வி புரொடக்ஷன் ( Denvi Production) – ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில் முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி, மார்ச் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் , அர்ஜுன் அசோகன், எம். எஸ். பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனிக்க கலை இயக்கத்தை சரவணன் வசந்த் மேற்கொண்டிருக்கிறார். மனோகர் வர்மா சண்டை பயிற்சியையும், ருச்சி வினோத் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இந்த திரைப்படத்தை தமிழகமெங்கும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
திரையிசையுலகில் 25வது ஆண்டாக வெள்ளிவிழா காணும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காதல் ரீசெட் ரிப்பீட் படக்குழுவினருடன் இயக்குநர் பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் நடிகர் அர்ஜுன் அசோகன் பேசுகையில்,
” நான் நடிக்கும் முதல் தமிழ் படம் இது. இந்தப் படத்தில் நல்லதொரு கேரக்டரை கொடுத்ததற்காக இயக்குநர் விஜய்க்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய தமிழ் உச்சரிப்புக்கு சக நடிகர் மதும்கேஷ் உதவி செய்தார். அவருக்கு நன்றி. இணைந்து நடித்த சக கலைஞர்களுக்கு நன்றி. தமிழில் இப்படி ஒரு அறிமுகம் கிடைத்ததற்கு மிகப்பெரும் நன்றி. இந்த கதாபாத்திரம் சுவாரசியமான திருப்பங்களை கொண்டது தான். என்னால் முடிந்த அளவுக்கு நன்றாக செய்திருக்கிறேன் என நினைக்கிறேன். இந்த கேரக்டர் ரொமாண்டிக்காகவும் இருக்கும் ,காமெடியும் இருக்கும், சில நேரங்களில் வில்லனாகவும் இருக்கலாம். கதாபாத்திரத்தை முழுமையாக பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்கத்திற்கு வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு திரைப்படமும் திரையரங்கத்திற்கான திரைப்படங்கள்தான். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடலுக்கு நான் முதல் முதலாக உதட்டை அசைத்திருக்கிறேன். இதுவே எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன்” என்றார்.
நடிகர் எம். எஸ். பாஸ்கர் பேசுகையில்,
” இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் என்னவென்று சொல்ல வேண்டியதில்லை. தம்பி விஜயின் எல்லா படத்திலும் எனக்கு பெயர் வாங்கிக் கொடுப்பது போன்ற நல்ல கேரக்டராகத்தான் கொடுப்பார். ஒரு துளியும் கர்வம் இல்லாமல் தான் செய்யக்கூடிய வேலையை ரசித்து பணியாற்றுபவர் தம்பி விஜய்.
இந்தப் படம் என் வாழ்க்கையில் கடைசி நிமிடம் வரை மறக்க முடியாத ஒரு படம். நான் வீடு கட்டிக் கொண்டிருக்கும் போது இந்தப் படத்தில் நடிப்பதற்கான சம்பளத்தை ஒப்பந்தம் செய்வதற்கும் முன்னரே கொடுத்து உதவினார் தம்பி விஜய்.
இந்தப் படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது ‘தந்தை’ என்ற ஸ்தானத்தில் இருந்து ‘தாத்தா’ என்ற ஸ்தானத்திற்கு உயர்ந்தேன். அப்படி இந்த படத்தில் நடித்த பிறகு என் வாழ்க்கையில் மறக்க முடியாத சுபமான நிகழ்வுகள் நடைபெற்றிருக்கிறது. இதற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் இந்த படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.
இயக்குநர் கணேஷ் கே பாபு பேசுகையில்,
” இந்தப் படத்தில் என் மனதிற்கு நெருக்கமான விருப்பத்திற்குரிய விஜய், ஹாரிஸ் ஜெயராஜ், மதும்கேஷ் என பலர் இருக்கிறார்கள். இப்படத்தின் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். அதில் நடிகர் மதும்கேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. படத்தில் நடித்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்” என்றார்.
நடிகை விஜி சந்திரசேகர் பேசுகையில்,
” இந்தப் படத்தின் கதை எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. இயக்குநர் விஜய் படம் என்றவுடன் நடிக்க சம்மதித்தேன். இந்தப் படத்தில் குட்டியான ‘கேமியோ’ ரோலில் நடித்திருக்கிறேன். இப்படத்தின் டைட்டில் டிரெண்டியாக இருக்கிறது. டைட்டிலே கதையை சொல்கிறது. விஜய் இயக்கும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பணியாற்றிய அனுபவம் வித்தியாசமானது. ”என்றார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில்,
” விஜய் – ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருடன் இணைந்து மீண்டும் இந்த படத்தில் பணியற்றிருக்கிறேன். இதில் பணியாற்றும்போது கிடைக்கும் மகிழ்ச்சி என்னவென்றால் நல்ல கவித்துவமான பாடல் வரிகளை எழுத வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான். விஜய் நல்லதொரு தமிழ் ரசிகர். பாடலில் கவித்துவம் இருந்தால் கொண்டாடுவார். அவருடன் இணைந்து பணியாற்றும்போது நல்லதொரு சௌகரியமான சூழலை உருவாக்கித் தருவார். இந்தப் படத்தில் நாலேகால் பாடல் எழுதி இருக்கிறேன். இந்தப் படத்தின் பாடலில் ‘உன் பார்வை..’ எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
மறதியை முன்வைத்து தமிழில் இதற்கு முன் சில படங்கள் வெளியாகி இருக்கிறது. மறதியை மையப்படுத்தி ஒரு அழகான காதல் படத்தை உருவாக்க முடியுமா..! மறதியை நகைச்சுவையாக எப்படி பார்க்கலாம்… மறதியை எமோஷனலாக எப்படி பார்க்கலாம்… பல தருணங்களில் நாம் நினைத்திருப்போம். மறதி இருந்தால் நன்றாக இருக்கும் என்று… இது போன்ற சூழலில் நம்மை மனிதர்களாக வைத்திருப்பது இதுபோன்ற கலை.. இது போன்ற படங்கள்.. இதுபோன்ற பாடல்கள்… தமிழ் மொழி… கவிதைகள்..இது தான். இதைத்தான் நாம் அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு போக வேண்டும். இந்த துறையையும் கணினிகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில் சர்வதேச தரத்தில் ஒரு பிரபல பாடகரின் குரலில்.. நல்ல கவிஞர்கள் எழுதியது போன்ற பாடல்வரிகளுடன் ஒரு பாடலை உருவாக்குவதற்கு இன்று மூன்று முதல் ஐந்து நொடிகள் போதுமானதாக இருக்கிறது. அதுபோன்ற பாடல்களை நாம் பயன்படுத்த தொடங்கலாம் அதனை விற்பனையும் செய்யலாம் இதுபோன்ற காலகட்டத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு பாடலை உருவாக்குவதற்காக எடுத்துக் கொள்ளும் காலகட்டம் இருக்கிறதே.. அவருடைய உழைப்பு.. வியக்க வைக்கும்.
‘உன் பார்வை..’ பாடலை பாடகர் வினித் பாடுவதற்காக அரங்கத்திற்கு வந்தார். அவரை தொடர்ந்து பாடுமாறு ஹாரிஸ் கேட்டுக்கொண்டார். அவர் பாடப் பாட அவரது குரலை இவர் டியூன் செய்து கொண்டிருந்தார். எந்த தருணத்தில் அவருடைய குரல் சிறப்பாக இருக்கிறது என்பதற்காக காத்திருக்கிறார். அந்தக் குரல் சரியான அளவில் பொருந்துவதற்காக காத்திருந்து அதை சிறிது சிறிதாக சேகரிக்கிறார். ‘காலம் கொஞ்சம் ஓய்வெடுக்க நானும் நீயும் அங்கே இறக்கை கொண்டு பறக்க வானம் பூமி எங்கே..’ என்ற வரிகள் வரும் இடத்தில் எல்லாம் ஒவ்வொரு வரியாக ரசித்து ரசித்து நுட்பமாக அதைப்பற்றி விவரித்து.. உருவாக்குவார். அப்படி ஒரு பாடலை ரசிப்பார். கொண்டாடுவார். பாடலை நாங்கள் பதிவு செய்வதற்கு எட்டு மணி நேரமானது. இது ஆண் குரலுக்கு மட்டும். பிறகு மீண்டும் பெண் குரலுக்கு… கடினமாக இதே போல் உழைப்பார். அதன் பிறகு மீண்டும் பாடலை செதுக்குவார். இப்படி ஒரு பாடலுக்காக மாதக்கணக்கில் மனித உழைப்பை வழங்கி உருவாக்குவார். அதனால் தான் இது போன்ற பாடல்கள் காலம் கடந்து கொண்டாடப்படுகிறது வேகமாக கிடைக்கும் ஃபாஸ்ட்ஃபுட்டை விட அம்மா சமைக்கும் உணவில் இருக்கும் சுவை நம்முடைய உடலில் தங்கி ஆரோக்கியத்தை பாதுகாப்பது போல்.. இது போன்ற மனிதர்கள் உருவாக்கும் கலை …காலத்தை கடந்து நிற்கும்.
சத்தங்கள் இரைச்சல்களாக இருப்பது தான் பாடல் என்ற சூழலில் மிகவும் மென்மையாக ஒரு குரல்… மென்மையான இசை… ஒரு பாடலை உருவாக்குவது என்பது சிறப்பு. அந்த அளவிற்கு இந்த படத்தில் பாடல்கள் இடம் பிடித்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜுக்கு என்னுடைய நன்றி. இயக்குநர் விஜய் மற்றும் தயாரிப்பாளருக்கும் நன்றி. ” என்றார்.
நடிகை ஜியா சங்கர் பேசுகையில்,
” உணர்வுகளை வெளிப்படுத்த மொழி தடையாக இருக்காது என்பதை நம்புகிறேன். நான் இதயத்தின் அடியாழத்திலிருந்து பேசுவதால் ஆங்கிலத்தில் பேசுகிறேன். இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. வாழ்க்கையில் வாய்ப்பிற்காக காத்திருந்தேன். இயக்குநர் விஜயை சந்தித்தேன். அவர் என் மீது முழுமையான நம்பிக்கையை வைத்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு கிடைத்த மிக சிறந்த மறக்க முடியாத அனுபவம். இது என்னுடைய கனவு. தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் பணியாற்ற வேண்டும் என்பதும் என்னுடைய கனவு. அதை தமிழில் இருந்து தொடங்கி இருக்கிறேன்.
இயக்குநர் விஜய் மிகச் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல சிறந்த மனிதர். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு கலைஞர்களையும் அவர்களுக்கு ஏற்ற வகையில் சௌகரியமான சூழலை உருவாக்கி தருவார். அனைவர் மீதும் அக்கறை செலுத்துவார். என் வாழ்க்கையில் முதல் வழிகாட்டி என் அம்மா தான். அவருக்கு அடுத்த வழிகாட்டி இயக்குநர் விஜய் தான்.
இது என்னுடைய முதல் தமிழ் படம். இயக்குநர் விஜய்- ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து அறிமுகமாகிறேன். இந்தப் படத்தில் நானும் பணியாற்றி இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாகவும், கனவு நனவானது போலும் இருக்கிறது.
இந்தத் திரைப்படத்தை பார்த்துவிட்டு திரையரங்கத்தை விட்டு வெளியேறும்போது ரசிகர்களின் மனதில் நாங்கள் இடம் பிடித்திருப்போம் என நம்புகிறேன். ” என்றார்.
நடிகர் மதும்கேஷ் பேசுகையில்,
” இங்கு கூடியிருக்கும் அனைவரது முன்னிலையிலும் நான் இந்த மேடையில் நிற்பது மறக்க முடியாத தருணங்கள். என்னுடைய எல்லா மறக்க முடியாத தருணங்களுக்கும் காரணமாக திகழும் என் பெற்றோர்களுக்கு முதலில் நன்றி .
காதல் ரீசெட் ரிப்பீட் இது ஒரு படம் மட்டுமல்ல.. எனக்கு மிகப்பெரிய பாடம். இந்த பாடத்தை எனக்கு கற்பித்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. இந்தப் படத்தில் சித்தார்த் எனும் கேரக்டரை என்னை நம்பி கொடுத்தீர்கள். நான் அதற்கு நான் 100 சதவீதம் நியாயம் செய்திருப்பதாக நம்புகிறேன். அதற்கு நன்றி.
இந்தப் படத்தை இதுவரை பார்த்த அனைவரும் படத்தின் விஷுவல் அனைத்தும் பெயிண்டிங் போல் இருக்கிறது என பாராட்டினார்கள். இந்தப் பாராட்டு அனைத்தும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவைத்தான் சேரும் அவர் எங்களை திரையில் அழகாக காண்பித்திருக்கிறார்.
புதுமுக நடிகர்களாக இருந்தாலும் இந்த கதையை நம்பி.. இயக்குநர் விஜயை நம்பி.. ஹாரிஸ் ஜெயராஜை நம்பி இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.
இந்தப் படத்தின் மெயின் ஹீரோ ஹாரிஸ் ஜெயராஜ். நான் அவருடைய இசையை கேட்டு வளர்ந்த பையன். அவருடைய தீவிர ரசிகன். அவருடைய இசையில் இந்த படத்தில் நான் நடித்திருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இந்தப் படத்தை ரசிகர்களை சென்றடையச் செய்வதற்காக ப்ரமோஷன் பணிகளையும் நீங்கள் ( ஹாரிஸ் ஜெயராஜ்) செய்திருக்கிறீர்கள். அதில் உங்களுடன் நடிப்பதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் பெருமிதமாக நினைக்கிறேன்.
படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் ரெகுலரான ரோம் காம் படமாக இல்லாமல் நீண்ட நாள் கழித்து ஒரு மிக்ஸ்ட் எமோஷன்- ட்ராமா – ஆக்சன் – லவ் – காமெடி – என எல்லாம் கலந்த கதையாக இருக்கும். திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்த பிறகு நல்லதொரு படத்தை பார்த்தோம் என்ற திருப்தியுடன் வீடு திரும்புவீர்கள். அனைவரும் மார்ச் 6 ஆம் தேதி திரையரங்கத்திற்கு வந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில்,
” 1999 ஆம் ஆண்டில் இளம் இயக்குநராக இருந்த கௌதம் மேனனை சந்தித்தேன். கேமரா மேன் ஆர் டி ராஜசேகர் மூலமாக விளம்பர படத்திற்காக அவர் என்னை சந்தித்தார். அதன் பிறகு 2000 ஆண்டில் ‘மின்னலே’ படத்தின் பணிகள் தொடங்கியது. அப்போது அந்தப் படத்தில் கதாநாயகன் மாதவன் புதிது. அப்போது ‘அலைபாயுதே’ படம் வெளியாகவில்லை. ரீமா சென் புது கதாநாயகி. அந்தப் படத்தில் டைரக்டர் புதுசு …கேமரா மேன் புதுசு… நானும் புதுசு… அந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் முரளி மனோகர் தான் ஸ்டார். அவர் ‘ஜீன்ஸ்’ படத்தை தயாரித்திருந்தார்.
அந்தப் படத்தில் பணியாற்றும்போது பாடலாசிரியர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. அப்போது தாமரை என்ற புதிய பாடலாசிரியரையும் சேர்த்துக் கொண்டோம். இதன் பிறகு அந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்து படம் வெளியானது. ‘மின்னலே’ திரைப்படம் தற்போது ரீ ரிலீசும் ஆனது.
இதை நான் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் கதை களம் என்று ஒன்று அமைந்து விட்டால்… அதற்கு எந்த ஸ்டாரும் தேவையில்லை. அது எல்லோரிடமிருந்தும் நல்ல வேலையை வாங்கி விடும். அது எல்லாரையும் பெரிய டெக்னீஷியன் ஆக்கிவிடும். சாதாரண நடிகர்களை பெரிய நடிகராக காண்பித்து விடும்.

பெரிய ஆர்டிஸ்ட்.. பெரிய டெக்னீசியன்ஸ்.. இணைந்து ஒரு மொக்கை கதையில் பணியாற்றினால்.. எல்லாம் காணாமல் போய்விடும். கதை என்பது ஒரு அமைப்பு. ஒவ்வொரு படத்திற்கும் அந்த அமைப்பு மாறுகிறது. இதை நான் பார்த்திருக்கிறேன். எல்லாம் பிரம்மாண்டமான கலைஞர்களாக இருப்பார்கள். ஆனால் அதில் ஒரு அமைப்பு இல்லை என்றால்.. உட்காராது. இதை நான் தொடர்ந்து பார்ப்பேன் அதன் பிறகு இதனை எது வழி நடத்துகிறது என்று ஆராய்வேன். தைரியமான நம்பிக்கைதான் இதை வழிநடத்துகிறது என உணர்ந்தேன்.
இது ஜெயிக்கும் என நம்பி ஒரு விசயத்தை தொடங்குகிறோம் அல்லவா… அது..அனைவரையும் ஒன்றிணைத்து ரசிகர்களையும் திரையரங்கத்திற்குள் இழுத்து வந்துவிடும். இதை ஆங்கிலத்தில் பாசிட்டிவிட்டி என சொல்வார்கள்.
‘மின்னலே’ படத்தில் புதிய பாடகர்களையும் அறிமுகப்படுத்தினேன். நான் இதுவரை 64 புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். 65 ஆவது பாடகி தான் காயத்ரி ராஜா. அனைவரும் நன்றாக இருப்பதில் எனக்கு சந்தோஷம்.
12 புதிய கதாநாயகர்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இது எனக்கு பெருமையாக இருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அவர்கள் பிரபலமடைவதற்கு இசை உதவி செய்து இருக்கிறது.
ஒரு கதையும், இசையும், நல்ல வரிகளும் சேரும்போது மிகப்பெரிய அளவில் சிவப்பு கம்பளத்தை விரிக்கிறது.
இயக்குநர் விஜய் இசையை மனதில் வைத்து தான் இந்த கதையை எழுதி இருக்கிறார். அதற்கேற்ப மதன் கார்க்கியும் கடினமாக உழைத்து இருக்கிறார். ஒவ்வொரு பாடலுக்கும் பல மாதங்களை செலவழித்திருக்கிறோம்.
இந்தப் படத்தில் மலையாள இயக்குநர் வினீத்தை பாடகராக அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
தரமான பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு சித்திரமாக இருக்கும். அதையும் கடந்து நாங்கள் அனைவரும் மனப்பூர்வமாக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு தளம் அமைத்துக் கொடுத்த இயக்குநர் விஜய்க்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி ” என்றார்.
இயக்குநர் பாலா பேசுகையில்,
” இயக்குநர் விஜய் தான் எனக்கு குரு. ஜூனியராக இருக்கலாம். இருந்தாலும் எந்த டெக்னீஷனாக இருந்தாலும் எப்படி கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்து குரு இயக்குநர் விஜய் தான். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அவர் எனக்கு தாயுமானவன்.
என்னுடைய நல்லது கெட்டது என அனைத்திற்கும் முதல் ஆளாக நின்று பங்கெடுப்பது அவன் தான். தாயும் தகப்பனுமாக இருந்து என்னை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
ஹாரிஸ் ஜெயராஜ் தயாரிப்பாளர்கள் புதுமுக நடிகர்கள் என அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
‘மதயானை கூட்டம்’ படத்தில் நடித்த விஜி சந்திரசேகரின் மிகப்பெரிய ரசிகன் நான். அந்தப் படத்தில் ஒரு காட்சியில் மனதில் நினைத்ததை கண்களிலேயே காட்டி இருப்பார். அதுபோன்ற திறமை நூற்றில் ஒருவருக்கு தான் வரும். எனக்குப் பிடித்த நடிகை ராதிகா தான். அதற்கடுத்து நீங்கள் தான்( விஜி சந்திரசேகர்) . உங்களை நான் இந்த விழாவில் நேரில் சந்தித்ததற்கு நன்றி.” என்றார்.

இயக்குநர் விஜய் பேசுகையில்,
” முதலில் இயக்குநர் பாலாவிற்கு நன்றி சொல்கிறேன். நீங்கள் சொன்னது மிகப்பெரிய வார்த்தை. அப்படி எல்லாம் இல்லை. உங்களுடைய படங்களை பார்த்து, அந்த பாதிப்பில் தான் நாங்கள் வந்திருக்கிறோம். உங்களுடைய படத்தின் மூலம் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு கலைஞரிடம் இருந்து எப்படி நடிப்பை வாங்க வேண்டும் என்பதை உங்கள் படத்தை பார்த்துதான் கற்றுக் கொண்டோம். நீங்கள் இங்கு வந்து படக் குழுவினரை வாழ்த்தியதற்கு நன்றி. உங்களுடன் தொடர்பில் இருப்பதையே நான் பாக்கியமாக கருதுகிறேன்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரின் அறிமுகம் கிடைத்து, அவர்களை சந்தித்த பிறகு பணியாற்றலாம் என்று சொன்னேன். அதன் பிறகு இந்த கதையை சொன்னவுடன் அதை நம்பி எனக்கு வாய்ப்பளித்தற்கும் நன்றி.
மாலி அண்ட் மான்வி புரொடக்ஷன்ஸ் போன்ற பட தயாரிப்பு நிறுவனங்கள் இன்றைக்கு தமிழ் சினிமாவுக்கு அவசியம் தேவை. நான் ஏன் அதை குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால்.. என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பிற்காக ஸ்காட்லாந்துக்கு சென்று இருக்கிறோம். ஜியா சங்கருக்கு விசா கிடைக்கவில்லை. ஒட்டுமொத்த படக்குழுவும் அங்கு சென்று விட்டோம். ஜியா மட்டும் இல்லை. வேறு யாரையாவது தேர்வு செய்து நடிக்க வைக்கலாமா..! என்ற சலனமும் ஏற்பட்டது. அப்போது தயாரிப்பாளரிடம் நாங்கள் இதுபோன்றதொரு நெருக்கடியான சூழலில் இருக்கிறோம். என்ன செய்யலாம்? என ஆலோசனை கேட்டேன். அப்போது அவர்,’ உங்களுக்கு எது நல்லது என்று மனதில் தோன்றுகிறதோ.. அதை செய்யுங்கள்’ என சொன்னார். அவர் அன்று சொன்ன ஒரு வார்த்தை தான் இந்தப் படம் இன்று இந்த அளவிற்கு மிக நேர்த்தியாக உருவாகி இருப்பதற்கு காரணம்.
இது போன்றதொரு கன்டென்ட்டை.. புது முகங்களை வைத்து ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற ஒரு லெஜெண்டுடன் பணியாற்றும் போது நல்லதொரு தயாரிப்பாளர் தேவை.
அதன் பிறகும் இந்தப் படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சில சிக்கல்கள் எழுந்தது. அப்போதும் தயாரிப்பாளர்கள் என்னுடன் இருந்து ஆதரவு அளித்தனர். நான் அவர்களுக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
நடிகர் மதும்கேஷ்- கடும் உழைப்பாளி. சித்தார்த் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்து தன்னை அந்த கதாபாத்திரத்தில் பொருத்திக் கொண்டார். இதற்காக ஆபரேஷன் செய்து… உடல் எடையை குறைத்து…என பல முயற்சிகளை மேற்கொண்டார். அவருடைய உழைப்பிற்கு இந்த படம் நல்லதொரு பலனை வழங்கும் என நான் நம்புகிறேன்.
அர்ஜுன் அசோகன்- தமிழுக்குத்தான் அறிமுகமே தவிர இந்திய சினிமாவுக்கு அல்ல. இந்த படத்திற்கு அவரும் ஒரு பில்லர். அற்புதமாக நடித்திருக்கிறார்.

ஜியா சங்கர் – மதராசபட்டினம் படத்தில் எமி ஜாக்சனை அறிமுகப்படுத்தும் போது எதை உணர்ந்தேனோ.. அதேபோல்தான் ஜியா சங்கரை அறிமுகப்படுத்தும் போதும் இருந்தது. அவரை வைத்து முதல் காட்சியை படமாக்கும் போது அவரிடம் நீங்கள் தமிழ் சினிமாவில் நெடுநாள் பணியாற்றுவீர்கள் என சொன்னேன். இப்போது சொல்கிறேன். அவர் இந்திய சினிமாவில் பணியாற்றி நல்ல இடத்தை தொடுவார். ஜியா – மராட்டிய பெண் கடும் உழைப்பாளி. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை நான் சிங்கிள் ஷாட்டில் எடுத்தேன். அந்த காட்சியில் நடிப்பதற்காக ஆறு முதல் ஏழு நாட்கள் வரை பயிற்சியில் ஈடுபட்டார்.
விஜி சந்திரசேகர்- நீங்கள் இந்தப் படத்தில் ‘கேமியோ’ கிடையாது. நல்லதொரு கதாபாத்திரம் தான். படத்தை பாருங்கள்.
எம் எஸ் பாஸ்கர் – இந்தக் கதையில் ஹீரோவுக்கும் அர்ஜுன் அசோகனுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கு எம் எஸ் பாஸ்கர் கேரக்டருக்கும் இருக்கிறது. பாஸ்கர் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் என்பதை கடந்து.. அவர் இந்திய சினிமாவின் பெருமிதம். இந்தப் படத்திற்காக அவர் 40 நாட்கள் பணியாற்றினார் அதற்காக அவருக்கும் நன்றி.
இந்தப் படத்தின் கதையை என்னுடன் இயக்குநர் ராஜமௌலியின் உதவியாளரான ஆர். மகாதேவ் இணைந்து எழுதினார். அவர்தான் திரைக்கதை எழுதியிருக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதையை முழுவதுமாக எழுதி முடித்த பின் இந்த கதை ஒரு மியூசிக்கல் கதை. இதை ஹாரிஸ் ஜெயராஜ் இல்லாமல் உருவாக்க முடியாது . இதனால் முதலில் தயாரிப்பாளரிடம் ஹாரிஸ் சார் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்றேன். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். அவருடன் நாங்கள் பணியாற்றுவதை பெரிய பாக்கியமாக நினைக்கிறோம். அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகப்பெரிய பாடம்.
அவர் ஒவ்வொரு பாடலையும் ஒரு படமாக பார்க்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பாடலுக்கும் அவர் ஒரு மாதம் எடுத்துக் கொண்டார். ஒரு மாதத்தில் தினமும் 12 மணி நேரம் உழைக்கிறார். அனைத்தையும் அவரே தீர்மானிக்கிறார். இந்தப் படத்திற்கு அவரும் மிகப்பெரிய பில்லர். படத்தின் பின்னணி இசைக்காக பல மாதங்கள் உழைத்திருக்கிறார் ஒவ்வொரு காட்சிக்கும் கவனம் செலுத்தி செதுக்கியிருக்கிறார்.
ஒவ்வொரு திரைப்படத்தின் பணிகளை பற்றி எழுத தொடங்கும் போது இது சூப்பர் ஹிட் என எழுத முடியாது ஆனால் அதை நம்ப வைப்பது படத்தின் பணிகள் நடைபெறும் தருணங்கள் தான். இந்த தருணங்களை நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், நேர்மையாகவும் செய்து இருக்கிறோம். இதற்கான பலனை மக்கள் வழங்குவார்கள் என நம்புகிறேன். ஹாரிஸ் ஜெயராஜின் 25 ஆவது ஆண்டில் அவருடன் இணைந்து நாங்களும் பயணித்திருக்கிறோம் என்பதுதான் எங்களுக்கு பெருமை. இதற்கு அவருக்கு நன்றி.
பாடலாசிரியர் மதன் கார்க்கி இந்தப் படத்தில் பாடல்களை தாண்டி அவருடைய பங்களிப்பு நிறைய இருக்கிறது. நா முத்துக்குமாருக்கு பிறகு இவருடன் தொடர்ந்து இணைந்து பணியாற்ற… பயணப்பட… விரும்புகிறேன்.
இன்றைக்கு ஒரு படத்திற்கு பிரமோஷன் என்பது மிகவும் அவசியம் என நினைக்கிறேன்.
நான் வாழ்க்கையில் இரண்டு விசயங்களை செய்வேன். ஒன்று வழி நடத்துவேன். இல்லையென்றால் பின்பற்றுவேன். இந்தப் படத்தின் பிரமோஷன் குழுவினரை நான் பின்பற்றினேன். அவர்கள் அற்புதமாக உழைத்திருக்கிறார்கள்.
இந்த பிரமோஷனில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு நடிகராகவும் மாறி இருக்கிறார். அதை நான் மிகவும் ரசித்தேன். அவரை இயக்க முடியவில்லையே..! என்ற இன்ப அதிர்ச்சியும் எனக்கு இருந்தது.
நாம் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறோம். சில படங்கள் மட்டும் தான் ஸ்பெஷலாக இருக்கும் அந்த வகையில் இந்த காதல் ரீசெட் ரிப்பீட் திரைப்படம் எனக்கு ஸ்பெஷல் ஆனது. ஏனெனில் அதற்காக அமைந்த குழு.

இந்தப் படத்திற்காக இந்த படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி
இது ஒரு சாதாரண மனிதனின் கதை. ஹீரோ என்பது யார்? உங்களுக்கு நீங்கள்தான் ஹீரோ. அதை நாம் முதலில் நம்ப வேண்டும். ஒருவருடைய தோற்றத்தை பார்த்தோ.. அழகை பார்த்தோ.. ஏற்கப்படுவதில்லை. ஒருவருடைய மனதை பார்த்து தான் ரசிக்கிறோம். அதுதான் ஹீரோ என நினைக்கிறேன். அப்படி ஒரு நல்ல மனம் கொண்டவனின் கதை தான் இது. இது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். ” என்றார்.
தயாரிப்பாளர் பிரேம்குமார் பேசுகையில்,
” இந்தப் படத்தின் கதையை இயக்குநர் விஜய் என்னிடம் சொல்லும் போது.. நான் கதையை கேட்கவில்லை. அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவரைப் பற்றி அவருடைய படங்கள் பேசியது. அவர் இயக்கத்தில் வெளியான ‘தெய்வ திருமகள்’ படத்தில் இடம்பெறும் ஜோக் என்னால் மறக்க முடியாது என சொன்னேன். அதன் பிறகு ஒப்பந்தத்தில் கையெழுத்து விட்டு படத்தின் பணிகளை தொடங்குமாறு சொல்லிவிட்டேன்.
நான் ஸ்காட்லாந்தில் படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்த்தேன். நான் இதுவரை நான்கு படங்களை தயாரித்திருக்கிறேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கிடைத்த அனுபவத்தை விட இவருடைய படப்பிடிப்பு தளத்தில் கிடைத்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. காட்சிகளை விரைவாக படமாக்கிக் கொண்டிருந்தார்.

இந்தப் படத்தை காலையில் மீனவர் ஒருவர் பார்த்தார். அவர் பார்த்துவிட்டு இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி இருக்கிறது என்றார். உண்மையில் இயக்குநர் விஜய் ஒரு லெஜண்ட் தான்.
இயக்குநர் பாலாவின் ‘சேது’ படம் வெளியான போது வட சென்னையில் உள்ள ஒடியன் மணி தியேட்டரில் பார்த்தேன். யார்ரா இந்த டைரக்டர்? என ஆச்சரியப்பட்டேன். அந்தப் படத்தை பார்த்து நான் அரை மணி நேரம் அழுதேன். அவர் இந்த விழாவில் கலந்துகொண்டு அவருக்கு நான் கை கூப்பி வரவேற்றபோது அந்த நினைவுகள் எனக்குள் வந்தது. அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை சொல்கிறேன்.
இப்படி காலத்தால் அழிக்க முடியாத படங்களை இயக்கிய இயக்குநர்களை பிரம்மா என்று சொல்லலாம். இப்படி திறமை வாய்ந்த படைப்பாளிகள் நம் தமிழ் திரை உலகில் இருக்கிறார்கள். இடைப்பட்ட காலங்களில் இது போன்ற படைப்புகள் வெளியாகவில்லை என்ற வருத்தத்தையும் இங்கு பதிவு செய்கிறேன். அந்த வருத்தத்தை இந்த படம் போக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழ் படங்கள் வளர்வதற்கும், வாழ்வதற்கும் இந்த எளியவனால் செய்ய முடிந்த உதவியை தொடர்ந்து செய்வேன். இந்த படக்குழுவிற்கு முழுமையான மனதுடன் நன்றி தெரிவிக்கிறேன். வெற்றி மட்டுமே நோக்கமல்ல. சமுதாயத்திற்கு நல்ல படைப்பை கொடுக்கும் படைப்பாளிகளை வாழ வைப்பதும் ஒரு சிறந்த பணி என நினைத்து… உங்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்கிறேன்”என்றார். 
