இந்திய கலாச்சாரத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஜப்பானைச் சேர்ந்த கீக் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோமாட்சு கோசானோவை சந்தித்து உரையாடினார். இதுமட்டுமல்லாது, ‘சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தையும் அவருக்கு பரிசாக வழங்கினார். இந்திய கலாச்சாரத்தின் மீது நடிகர் அல்லு அர்ஜூன் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பையும் மரியாதையையும் இது பிரதிபலிக்கிறது.
மேலும் இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் பற்றிய வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் அல்லு அர்ஜுன் பகிர்ந்து கொண்டார். இராமாயணத்தின் மதிப்பு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் குறித்தும் அவர் விளக்கமாக எடுத்துரைத்தார்.
இந்த ஓவிய பரிசளிப்பு தருணம் பாரம்பரியம், ஆன்மீகம் மற்றும் கலை வெளிப்பாடு ஆகியவற்றின் மீது இரு நாடுகளும் கொண்டிருக்கும் ஈடுபாட்டை வெளிப்படுத்தியதோடு, இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையேயான கலாச்சார உரையாடலின் சிறப்பான தருணமாகவும் அமைந்தது. இந்தியத் திரைப்படத்துறைக்கும் சர்வதேச படைப்புக் குழுக்களுக்கும் இடையே வளர்ந்து வரும் உலகளாவிய தொடர்பையும் இது வலுப்படுத்தியுள்ளது.
உலகளவில் இந்தியக் கலாச்சாரத்தைப் பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்துவதில் ஆர்வம் காட்டிவரும் நடிகர் அல்லு அர்ஜுனின் இந்தச் செயல், மொழி- கலாச்சார எல்லைகளைக் கடந்து பலரிடமும் புரிதலையும் பரஸ்பர மரியாதையையும் வளர்ப்பதில் கலை மற்றும் சினிமாவின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

