சிங்கப்பூரில் மீலாதுன் நபி திரைப்படம்

தாரகை முத்தமிழ் கழகம் ஏற்பாட்டில் கடந்த ஞாயிறு, மே 10ஆம் தேதி ஊட்லண்ட்ஸ் நூலகத் திரையரங்கில் ரிலீஸ் ஆனது. சிங்கப்பூர் மலாய் வர்த்தக மற்றும் தொழில் சபையின் தலைவர் முனைவர் அப்துல் மாலிக் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் சமூகத்திற்குத் தொடர்ந்து ஆற்றி வரும் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனத் தலைவர் திரு. சிராஜுதீனுக்கு ‘சமூகக் கலைச் செம்மல்’ விருதினை சிறப்பு விருந்தினர் வழங்கிக் கௌரவித்தார்.
மேலும், இப்படத்தின் சமூகத் தாக்கம் மற்றும் மக்கள் மத்தியில் நிலவும் பெரும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, இயக்குநர் மில்லத் அகமதுவுக்கு ‘சிறந்த ஆவணப் படம்’ விருதும் வழங்கப்பட்டது. வரும் ஜூன் 16-ஆம் தேதி மலேசியா கோலாலம்பூரில் இப்படத்தைத் திரையிடவுள்ள ரெயின்போ ஈவென்ட்ஸ் அமைப்பாளர் திருவாட்டி ரசிதா பேகம், படத்தின் சுவரொட்டியைப் பெற்றுக்கொண்டார்.

எனக்குத் தமிழ் தெரியாது என்றாலும், வசன வரிகளின் உதவியுடன் முழுப் படத்தையும் பார்த்து வியந்தேன். இந்தப் படம் மலாய் மொழியில் வெளிவர வேண்டும்; அதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்,” என்று நெகிழ்ச்சியுடன் முனைவர் அப்துல் மாலிக் குறிப்பிட்டார். விருது பெற்ற திரு. சிராஜுதீன் பேசுகையில், “எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் சமூகத்திற்குத் திருப்பிச் செய்ய வேண்டும் என்ற கொள்கையே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.
இயக்குநர் மில்லத் அகமது கூறுகையில், “இப்படம் பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளது. அந்தப் பயணத்திற்கு முன்னதாக, சிங்கப்பூரில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் எனது உழைப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதுகிறேன்,” என்றார்.
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் திரு. அருண் மகிழ்நன், “இது ஒரு மகத்தான படைப்பு. நான் இதற்கு முன்பு இப்படி ஒன்றைப் பார்த்ததில்லை. சாதாரணத் திரைப்பட இயக்குநர்களின் எல்லைக்கு அப்பாற்பட்ட கடின உழைப்பை இதில் காண முடிகிறது,” என்று பாராட்டினார். எழுத்தாளர் ரமா சங்கரன் கூறுகையில், “இது வெறும் பொழுதுபோக்குப் படம் அல்ல; ஒரு கலாச்சார மற்றும் ஆன்மீகப் படைப்பாகப் பார்த்து ரசிக்க வேண்டும். நான் தேடிய பல வினாக்களுக்கு இந்தப் படம் விடையளித்துள்ளது,” என்றார்.
நிகழ்ச்சியின் நிறைவாக, தாரகை முத்தமிழ்க் கழகத்தின் தலைவர் திருவாட்டி மஹாஜபீன், “பார்வையாளர்களின் நெகிழ்ச்சியான பாராட்டுக்களே இந்தத் திரையிடலின் வெற்றியைப் பறைசாற்றுகின்றன,” என்று நன்றியுரை வழங்கினார்.

Related posts

Leave a Comment