காமராஜர் ஆவணப்படம் மற்றும் திருக்குறள் இரண்டாம் பாகத்தின் மாதிரி காட்சி வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் சமூகத்தின் முக்கிய ஆளுமைகள், மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வினில் இயக்குநர் A.J. பாலகிருஷ்ணன், காமராஜர் திரைப்படத்தை அரசுடமையாக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியதுடன், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் தனது கருத்துகளை பகிர்ந்தார்.
இயக்குநர் A.J. பாலகிருஷ்ணன் பேசியதாவது.., ,
“அனைவருக்கும் மாலை வணக்கம். பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளில் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததை என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
நான் நெல்லை மாவட்டத்திலிருந்து சென்னை வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, 1994-ல் பெருந்தலைவர் காமராஜரின் உதவியாளர் வைரவன் அவர்களைச் சந்தித்தேன். காமராஜரின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை தெரிவித்தேன். அதன் பிறகு அவர் என்னை ஜி.கே. மூப்பனார் அவர்களிடம் அழைத்துச் சென்றார்.
இந்த திரைப்படம் உருவாக தேவையான அனைத்து உதவிகளையும் மூப்பனார் அவர்கள் செய்தார். ஆனால் அவர் மறைந்ததால் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. பின்னர் ஜி.கே. வாசன் அவர்களைச் சந்தித்தேன். ‘அப்பா தொடங்கி வைத்த பணியை முடிக்க வேண்டும்’ என்று கூறி, இந்தப் படத்தை நிறைவு செய்ய தேவையான அனைத்து உதவிகளையும் அவர் வழங்கினார்.
இன்றைய காலத்தில் இப்படிப்பட்ட படத்தை உருவாக்குவது மிகவும் கடினம். நான் காமராஜரைப் பற்றிய முழுமையான திரைப்படத்தை உருவாக்கி, அதை 2004-ல் வெளியிட்டேன். அந்தச் சூழ்நிலையும், அதற்கான வாய்ப்புகளும் இன்று எளிதாக கிடைப்பதில்லை.
அதன் பிறகு மகாத்மா காந்தி பற்றியும், திருக்குறள் பற்றியும் திரைப்படத்தை உருவாக்கினேன். இந்த நிகழ்வு நடைபெறுவதற்கும், நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடுவதற்கும் காரணம் காமராஜர்தான் என்று நான் நம்புகிறேன்.
இன்றைய அரசியல் மாற்றங்களுக்கும் காமராஜரின் சிந்தனைகளே அடிப்படையாக உள்ளன. தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் சூழல் உருவாகுவதற்கும் அவரது ஆட்சிமுறையும், மக்கள் நலப் பணிகளும் முக்கிய காரணமாக இருந்துள்ளன. அவரது ஆட்சியின் சிறப்புகள் மக்களின் நினைவிலும், பத்திரிகைகளின் பதிவுகளிலும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
“காமராஜர் படத்திற்கான பணிகள் என் 30-வது வயதிலேயே தொடங்கின. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் படத்துடன் தொடர்புடைய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சரிடம் நான் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறேன். காமராஜர் திரைப்படத்தை அரசுடமையாக்க வேண்டும். அந்தப் படத்தின் செயற்கைக்கோள் (Satellite) உரிமைகள் உள்ளிட்ட பல உரிமைகள் இதுவரை விற்கப்படவில்லை. தற்போது அது யூடியூபில் மட்டுமே உள்ளது. எனவே அந்தப் படத்தை அரசு வாங்கி, அதற்கான உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளேன்.
‘ஒரு தனிநபர் அரசிடம் இப்படிக் கோரிக்கை வைக்கலாமா?’ என்ற கேள்வி எனக்கே எழுந்தது. ஆனால் இந்த நாட்டுக்காக வாழ்ந்த ஒரு மாபெரும் தலைவரின் வாழ்க்கையை பதிவு செய்வதற்காக என் வாழ்க்கையின் 30 ஆண்டுகளை அர்ப்பணித்திருக்கிறேன். அந்த வகையில் இந்தக் கோரிக்கையை வைக்கும் தகுதி எனக்கு இருப்பதாக நான் கருதுகிறேன். காமராஜருக்கு மக்கள் செலுத்த வேண்டிய நன்றிக்கடனின் ஒரு பகுதியாக இந்த திரைப்படம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
செய்தியாளர்களின் அரசியல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,
“1967-ல் காமராஜர் முதலமைச்சராக இல்லை. அவர் 1963-லேயே பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அந்த இடைப்பட்ட காலத்தில் நிர்வாகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இருந்தாலும் புதிய அரசு பொறுப்பேற்றபோது, ‘அவர்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடுங்கள்; உடனே விமர்சிக்க வேண்டாம்’ என்று காமராஜர் கூறியிருந்தார்.
அதேபோல் இப்போது புதிதாக அரசியலுக்கு வந்துள்ள முதல்வர் விஜய்க்கும் மக்களும் அரசியல் கட்சிகளும் உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றம் எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்க்காமல் அவசர முடிவுகளுக்கு வரக்கூடாது.
காமராஜரின் நேர்மையான அரசியல், சுத்தமான நிர்வாகம் ஆகியவை இன்னும் மக்களின் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அந்த நினைவுதான் இன்றைய அரசியல் மாற்றங்களுக்கும் ஒரு உந்துசக்தியாக அமைந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
காமராஜ் படத்தை அரசு வாங்கும் வாய்ப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
“அரசு வாங்குகிறதா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் காமராஜரின் வாழ்க்கை வரலாறு மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதே என் நோக்கம். அவரைப் பற்றிய விழிப்புணர்வு குறைந்தபோதுதான் பல மாற்றங்கள் ஏற்பட்டன. காமராஜரின் நேர்மை, மக்கள் சேவை, நல்லாட்சி ஆகியவற்றின் நினைவு மக்களின் மனதில் இன்னும் வலுவாக இருக்கிறது. அந்தச் சிந்தனைகள் தொடர்ந்து அடுத்த தலைமுறையையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறேன்.”என்றார்
மேலும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் குறிப்பாக ஊடக நண்பர்களுக்கும் நன்றிகள் தெரிவித்தார்.
இயக்குநர் நடிகர் சுப்பிரமணியம் சிவா பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். இப்படி ஒரு சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்த இயக்குநர் A.J. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு முதலில் என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு நல்ல விஷயத்தை உருவாக்குவது மட்டுமல்ல, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் பெரிய சாதனை. அதற்கு துணைநின்ற அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த படத்தைப் பார்க்கும்போது, காமராஜர் ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல, மனித உருவில் வாழ்ந்த தெய்வம் என்ற உணர்வு ஏற்படுகிறது. பூமியில் ஒரு மனிதன் எப்படியெல்லாம் நேர்மையாகவும், எளிமையாகவும், மக்களுக்காகவும் வாழ முடியும் என்பதற்கு காமராஜரின் வாழ்க்கை மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
படத்தின் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு சம்பவமும் மனதைத் தொடும் வகையில் அமைந்திருக்கிறது. ஒரு கதையைப் பார்ப்பது போல இல்லாமல், ஒரு மகத்தான மனிதரின் வாழ்க்கையை நேரில் காணும் உணர்வை இந்த படம் தருகிறது.
உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது அறையில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. மனிதன் இவ்வளவு உயர்ந்த பண்புகளுடன் எப்படி வாழ முடியும் என்ற வியப்பே அதற்குக் காரணம். அதுபோல நம் வீட்டிலும், நம் மனதிலும் காமராஜருக்கு இடம் இருக்க வேண்டும்.
அறிவியல் வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு, புதிய தொழில்நுட்பங்கள் என உலகம் எவ்வளவு முன்னேறினாலும், காமராஜர் போன்ற மகத்தான தலைவர்களை நாம் மறந்துவிடக் கூடாது.
இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. பார்வைக் குறைபாடு கொண்ட ஒரு சிறுவனுக்கான உதவியில் அதிகாரிகள் தாமதம் ஏற்படுவதாகச் சொன்னபோது, ‘மக்களின் தேவையில் தாமதம் இருக்கக் கூடாது’ என்ற மனநிலையுடன் காமராஜர் உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொன்னார். அதுதான் உண்மையான மக்கள் தலைவர் என்பதற்கான அடையாளம்.
இந்த படத்தை ஒரு மனிதன் மாதத்திற்கு ஒருமுறையாவது பார்த்தால், அவர் நிச்சயம் ஒரு நல்ல மனிதராக மாறுவார் என்று நான் நம்புகிறேன். அந்த அளவுக்கு வாழ்க்கை மதிப்புகளையும் மனிதநேயத்தையும் இந்தப் படம் கற்றுத்தருகிறது.
குறிப்பாக அரசியலில் இருப்பவர்களும், அரசியலுக்கு வர விரும்புபவர்களும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்வது என்றால் என்ன என்பதை காமராஜரின் வாழ்க்கை கற்றுத்தருகிறது.
திருக்குறள் இரண்டாம் பாகம் பற்றிய மாதிரி காட்சியும் மிகவும் சிறப்பாக இருந்தது. திருக்குறள் என்பது ஒரு சாதாரண நூல் அல்ல; மதம், மொழி, இனம் ஆகிய எல்லைகளைக் கடந்து மனிதகுலத்திற்கே வழங்கப்பட்ட உலகப் பொதுமறை. அந்தப் படைப்பை திரைப்படமாக மக்களிடம் கொண்டு செல்லும் இந்த முயற்சியும் வெற்றியடைய வேண்டும்.
காமராஜ் படத்தை போலவே திருக்குறள் திரைப்படமும் மக்களுக்கு வழிகாட்டும் ஒரு படைப்பாக அமையும்
இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
