கதை…
ராமேஸ்வரம் கடலில் பக்தர்கள் காணிக்கையாக போடும் நாணயங்களை கடலில் மூழ்கி எடுத்து அதன் மூலம் தன் குடும்பத்தை காப்பாற்றி வருபவர் கருணாஸ்.. ஒரு நாள் இவர் நீரில் மூழ்கும் போது விலை உயர்ந்த மதிப்புள்ள ஒரு பொருளை எடுக்கிறார்..
அது அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என மனைவி சொன்னதன் பேரில் காவல் நிலையத்திற்கு செல்கிறார்.. ஆனால் அங்குள்ள காவலர்கள் அந்த பொருளை அபகரிக்க திட்டமிடும்போது சப் இன்ஸ்பெக்டர் வந்து விடுகிறார்..
இதனால் திருட்டு போலீஸ் கருணாஸ் மீது திருடன் பட்டம் கட்டி அவரை சிறையில் அடைகின்றனர்.
எந்த தவறும் செய்யாத தன் கணவனை காப்பாற்ற வக்கீல் நிமிஷா சஜயன் உதவியை கேட்கிறார் கருணாஸ் மனைவி..
அதன்படி காவல் துறையை எதிர்த்து வாதாடுகிறார் வக்கீல்.. அப்பொழுது காவல்துறைக்கு ஆதரவாக தமிழக அரசும் களத்தில் குதிக்கிறது.. இதை இரண்டையும் எதிர்த்து நிரபராதி கருணாஸ் என காப்பாற்றினாரா வக்கீல்.. என்பதுதான் படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை..
நடிகர்கள்…
நாயகனைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் கதையின் நாயகனாகவே வாழ்ந்திருக்கிறார் கருணாஸ்.
நேர்மையாக கண்ணியமாக வாழும் ஒருவன் காவல்துறையால் வஞ்சிக்கப்பட்டால் அவன் நிலை என்னவாகும் என்பதை தனது மனதவிப்பை அழகாக உணர்ச்சிகளை காட்டியிருக்கிறார்.. நிரபராதியை குற்றவாளி ஆக்கும் காவல்துறைக்கு கடைசியில் கருணாஸ் கொடுக்கும் நெத்தியடி பதில் காவல்துறைக்கு சவுக்கடி..
மலையாள நடிகை நிமிஷா சஜயன்.. வக்கீல் என்பவர் பணத்துக்காக மட்டுமல்ல நீதிக்காக போராட வேண்டும் என தன் கேரக்டர் மூலம் நிரூபித்து இருக்கிறார்.
கடலில் இருக்கும் பொருட்கள் எல்லாம் அரசுக்கு சொந்தம் என்றால் கடலில் உள்ள மீன்கள் யாருக்கு சொந்தம்.? என்று அவர் கேட்கும் போது கை தட்ட வைக்கிறது..
கருணாஸ் மனைவி, கருணாஸ் பிள்ளைகள், கருணாஸ் தங்கை உள்ளிட்ட அனைவருமே நடிப்பில் கச்சிதம்.. போலீஸ் மோகன் ராமன் வில்லத்தனத்தில் கலக்கியிருக்கிறார்..
விஜயலட்சுமி வீரமணி, கமலேஷ் ஜெகன், ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மோகன் ராமன், கவிதாலயா கிருஷ்ணன், தீபா சங்கர், லொள்ளு சபா சுவாமிநாதன், ஷாஷா சிவகுமார், சேத்தன் சீனு உள்ளிட்ட அனைவரும் கேரக்டர்களுக்கு வலு சேர்த்து இருக்கிறார்கள்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
பாடல்கள் கதையுடன் ஒன்றி பயணிக்கிறது.. பின்னணி இசையில் வாட்டர் பபுள் எபெக்ட் கொடுத்து பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார் சாம் சி எஸ்..
ஒளிப்பதிவாளர் ஆல் பி. ஆண்டனி.. ராமேஸ்வரம் கடல் அக்னி தீர்த்தம் ஆகியவைகளை அழகாக காட்டியிருக்கிறார்..
ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்திருக்கிறார்..
இயக்குனர் – சஜீவ் பழூர்.. தேசிய விருது வென்ற இவர் ஒரு மலையாள இயக்குனர்… இந்த படம் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்
ஒரு அப்பாவி நிரபராதி மீது பொய் வழக்குகள் போட்டா காவல்துறைக்கு என்ன ஆகும்.. அரசு எப்படி செயல்படும் என்பதை உணர்ச்சிப் பூர்வமாக சொல்லியிருக்கிறார்.
ஆனால் முதலமைச்சர் (பிரபு) நேர்மையாக இருந்தால் சாமானியனுக்கும் நீதி கிடைக்கும் என்பதை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்..

