“மதிமாறன்” திரைப்பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா

 

ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”. இம்மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இவ்விழாவினில்…

தயாரிப்பாளர் நவீன் சீதாராமன் பேசியதாவது…
இது நிஜமா கனவா என அறியமுடியவில்லை. நான் மிகவும் எமோஷனாலாக இருக்கிறேன். நான் ஹாலிவுட்டில் வேலை செய்திருந்தாலும் இங்குத் தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் மேடையில் இருப்பது பெருமையாக இருக்கிறது. அண்ணன்கள் தான் தம்பிகளைக் கஷ்டப்பட்டு பெயர் வாங்க வைப்பார்கள். என் அண்ணன் பாலா சீதாராமன், லெனின் இருவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இப்படத்தில் சம்மதித்து வேலைப்பார்த்தற்காக நன்றி கூறிக்கொள்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் எம்.எஸ் பாஸ்கர். இந்தப்படம் பாருங்கள் கண்டிப்பாக உங்களை அழ வைப்பார். இந்த மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். பத்திரிக்கை ஊடக தோழர்களுக்கு நன்றிகள்.

நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசியதாவது..,
இது ஒரு நல்ல கதை. நல்ல கேரக்டர். படத்தில் அனைத்து கேரக்டர்களுமே அருமையான பாத்திரங்கள். எனக்கு மந்திரா கதை சொன்னபோதே மிகவும் பிடித்திருந்தது. உணர்வுப்பூர்வமாக மிகவும் எமோஷனலாகத் தான் நிறைய இடத்தில் டயலாக் பேசினேன். என்னை மிகவும் கலங்க வைத்தது இந்தப்படம். தயாரிப்பாளர்கள் மிகச் சிறப்பாக அனைவரையும் உபசரித்தார்கள். ஹீரோ வெங்கட் செங்குட்டுவன் அவ்வளவு அற்புதமாக நடித்துள்ளார். நடித்து விட்டு ஒவ்வொரு ஷாட்டிலும் என்னைக்கேட்டுக்கொண்டே இருப்பார் அவ்வளவு ஆர்வம். உயரத்தில் என்ன இருக்கிறது. எனக்கே முடி கொட்டிய பிறகு தான் வாய்ப்புகள் வந்தது. என்னையும் கிண்டல் செய்துள்ளார்கள். உலகில் சாதனை படைத்த பலர் உருவத்தில் குறைவாக இருந்தவர்கள் தான்.அதற்காகக் கவலையே படக்கூடாது. இவனா என் மகளாக நடித்திருக்கிறார் என் மகள் தான் நன்றாக நடித்துள்ளார் இப்படி ஒரு அற்புதமான படத்தில் நானும் நடித்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும். அனைவருக்கும் என் நன்றிகள்.

நடிகர் சுதர்ஷன் பேசியதாவது..
மதிமாறன் மிக அர்ப்பணிப்பான நடிகர் அருமையாக நடித்துள்ளார். நான் இந்தப்படத்தில் ஒரு போலீஸ் பாத்திரம் நடித்துள்ளேன். வெளியில் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும்படியான பாத்திரம். வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. தயாரிப்பாளருக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் பிரவீன் குமார் பேசியதாவது….
8 வருட நட்பு, நாளைய இயக்குநர் குறும்படம் பார்த்து எனக்கு வாய்ப்பு தருகிறேன் என்றார் மந்திர பாண்டியன். பாலா சார் படத்தில் வாய்ப்பு தந்தார் ஆனால் அதில் நடிக்க முடியவில்லை. மீண்டும் இந்தப்படத்தில் வாய்ப்பு தந்தார் என்றென்றும் நன்றிகள். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது….
இயக்குநர் தயாரிப்பாளர் இருவரும் எனக்கு நெருக்கமானவர்கள். இயக்குநர் மந்திரா மிகத்திறமையானவர். அவர் திறமை மீது எனக்குப் பெரிய நம்பிக்கை உள்ளது அவரிடம் நிறையக் கதைகள் பேசியுள்ளேன். அவர் கண்டிப்பாக நல்ல படம் செய்திருப்பார். தயாரிப்பாளர் நவீன் என் நண்பர். இந்தப்படத்திற்காக அவருக்கு வாழ்த்துக்கள். எம் எஸ் பாஸ்கர் சமீப காலங்களில் மிகச்சிறப்பான கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவர் இருந்தாலே படம் நன்றாக இருக்கும். கதாபாத்திரங்கள் மீது தான் இந்தப்படம் பயணிக்கிறது. இந்தப்படமும் சிறப்பாக இருக்கும். எப்போதுமே ஒரு கதைக்காகச் செலவு செய்ய வேண்டும் ஹீரோவுக்காக செலவு செய்யக்கூடாது அப்போது தான் படம் சிறப்பாக வரும். தமிழ்த்திரை இசையை உலகிற்கு எடுத்துச் சென்ற இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார். அவர் தான் இன்றைய நாயகன். இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது..
ஜிஎஸ் பிரதர்ஸ் நவீன் சீதாராமன், பாலா சீதாராமன், லெனின் சீதாராமன் மூவருக்கும் வாழ்த்துக்கள். பாலாவின் பள்ளியிலிருந்து வந்திருக்கும் இயக்குநர் மந்திராவிற்கு வாழ்த்துக்கள் அவருக்கு முதல் பட வாய்ப்பை நம்பித்தந்த தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். இந்த டைட்டில் பற்றி இயக்குநரிடம் கேட்டேன். படிக்காத பெண் கதாபாத்திரம் நாயகியின் பெயர் மதி, குள்ளமான நாயகன் பெயர் நெடுமாறன், இரண்டையும் இணைத்து வைத்ததாக சொன்னார்.டைட்டிலே இவ்வளவு யோசித்து வைத்துள்ளார், கண்டிப்பாக அவரது படம் நன்றாக இருக்குமென நம்பினேன். உருவகேலியை வைத்து வித்தியாசமான களத்தில் படம் செய்துள்ளார். டிரெய்லர் அற்புதமாக உள்ளது. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மிகச்சிறப்பான இசையைத் தந்துள்ளார். வெங்கட், இவானா, ஆராத்தியா மூவரும் நல்ல நடிப்பை தந்துள்ளனர். படம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…
ஒரு அற்புதமான கதைக்களம். நாயகனுக்காகக் கதை எழுதும் காலத்தில் கதாபாத்திரத்திற்காக நாயகனைத் தேர்வு செய்திருக்கும் இயக்குநர் மந்திராவுக்கு வாழ்த்துக்கள். பாலாவின் உதவியாளர் மிக தைரியசாலியாக இருக்கும் அவருக்கு வாழ்த்துக்கள். நாயகன் வெங்கட் உயரம் தான் குறைவு உள்ளம் உயரமானது. உயர்ந்த உள்ளம் கொண்டிருக்கிறார். உயரமாய் இருந்து என்ன பிரயோஜனம், ஒன்றுமில்லை. நம் தமிழ் நாட்டை வளப்படுத்திய அண்ணா உயரம் குன்றியவர். உலகம் போற்றிய அப்துல் கலாம் உயரம் குன்றியவர் தான். அழகென்பது உடலில் அல்ல, அவன் செய்யும் செயலில் இருக்கிறது. படத்தில் டயலாக் எல்லாம் அற்புதம். வாழ்வுக்கு நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் ஜிஎஸ் பிரதர்ஸ் நவீன் சீதாராமன், பாலா சீதாராமன், லெனின் சீதாராமன் மூவருக்கும் என் வாழ்த்துக்கள். இவர்கள் தமிழ் சினிமாவை வாழ வைக்க வந்துள்ளார்கள் அற்புதமான படைப்பைத் தந்துள்ளார்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் ரத்ன சிவா பேசியதாவது…
மந்திரா என்னிடம் வேலைபார்த்தவர் ஏற்கனவே 7 வருடங்களுக்கு முன்பே ஒரு படம் எடுத்து அது நின்றுவிட்டது. பின் பாலாவிடம் உதவியாளராக வேலை பார்த்தான், இரண்டாவது படம் கிடைக்கும் போது, யாராக இருந்தாலும் கர்ஷியல் படம் தான் எடுப்பார்கள் ஆனால் இப்படி ஒரு கதைக்களத்தில் படம் செய்திருக்கும் மந்திராவிற்கு வாழ்த்துக்கள். இந்த வாய்ப்பை தந்து இப்படி ஒரு படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது…
மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு மந்திரா இப்படம் செய்துள்ளார். தயாரிப்பாளர் என் நண்பர் இப்படி ஒரு படத்திற்கு ஆதரவு தந்துள்ளார்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். இப்படி படம் தான் பலருக்குக் கதவைத் திறந்து விடும். இன்றைய நாயகன் கார்த்திக் ராஜா அவருக்கு இதுவரை ஒரு சரியான களம் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது இந்தப்படம் அதை மாற்றும். இப்போதைய சினிமா ஏதாவது ஒரு கருத்தைப்பேச ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி. உருவக் கேலியை விமர்சிக்கும் அருமையான போராளிகளின் நல்ல படைப்பு இது வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் மந்திர பாண்டியன் பேசியதாவது…
மாதா பிதா பாலா சார் பாபு சார் எல்லோருக்கும் நன்றிகள். 11 வருட உழைப்பு, கனவு, சின்ன சின்னதாகப் பல வருடம் உழைத்த பிறகு, ஒரு படம் கமிட்டாகி நின்ற பிறகு, எங்கோ வேறு ஒருவருக்குக் கதை சொன்ன போது, அந்தக்கதையைக் கேட்டு எனக்காக மட்டுமே இந்தப்படத்தைச் செய்த பாபு சாருக்கு நன்றி. எனக்காக மட்டும் கதையே முழுதாகக் கேட்காமல் இந்தப்படத்தைச் செய்த பாபு சார் எனக்குக் கடவுள் தான். இப்படத்தை வெளியிடும் பாப்பின்ஸ் நிறுவனம் வரும் காலத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும். நான் கிராமத்திலிருந்து வந்தவன், என்னை என் உருவத்தை வைத்துத் தான் எடை போடுகிறார்கள். Don’t judge book by its cover அது தான் உண்மை ஒருவரின் திறமை அவரது உருவத்தில் இல்லை. அதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்துத் தான் இப்படம் எடுத்தேன். இந்தப்படத்தை நிஜத்திற்கு நெருக்கமாக, கமர்ஷியல் அம்சத்துடன் அனைவரும் ரசிக்கும்படி எடுத்துள்ளோம். இந்தப்படம் உங்களைத் திருப்திப்படுத்தும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். இவானா நாச்சியார் படத்தில் மூலம் அறிமுகம், அப்போது 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அப்போது கிடைத்த அறிமுகம், நான் இந்தக்கதை சொன்ன போது அம்மாவுடன் சென்னை வந்து கேட்டார். கதை கேட்கும்போதே அவரது அம்மா அழுது விட்டார். இந்தப்படத்தில் வருவது போல் இவானாக்கு நிஜத்தில் டிவின், லியோ எனும் தம்பி அவருக்கு இருக்கிறார். இதில் அக்காவுக்கும் தம்பிக்குமான உறவு தான் கதை. அதனால் எமோஷனலாக கமிட்டாகிவிட்டார். நான் தான் கண்டிப்பாக செய்வேன் என்றார். சிலர் நல்ல அறிமுகமான நடிகையைப் போடலாமே என்றார்கள் படம் வரும் போது மிகப்பெரிய நடிகையாவார் என்றேன் எங்கள் படம் வருவதற்கு முன்னே ஸ்டாராகிவிட்டார். என் தங்கை தான் இவானா, அவர் ஸ்டாரானது எனக்கு மகிழ்ச்சி. வெங்கட் ஒரு வீடியோவில் டான்ஸ் ஆடியதைப் பார்த்துத் தான் அவரைத் தேர்ந்தெடுத்தேன், அயலான் படத்தில் ஏலியன் உடம்பில் அவர் தான் நடித்துள்ளார். முகம் தெரியவிட்டாலும் பரவாயில்லை என்று திறமையைக் காட்ட நினைத்தவர் தான் வெங்கட். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகனாக மாறுவார். சுதர்ஷன் ஒரு ஹீரோயிக் ரோல் செய்துள்ளார் நன்றாக நடித்துள்ளார். பர்வேஸ் அழகான ஒளிப்பதிவைத் தந்துள்ளார். சதீஸ் சூர்யா பாலா சார் படங்கள் செய்தவர் எனக்காக எடிட் செய்தார் அவருக்கு என் நன்றிகள். தொழில் நுட்ப குழுவில் எனக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள். எம் எஸ் பாஸ்கர் சார் அவர் என் அப்பா அவ்வளவு தான். கார்த்திக் ராஜா சாருக்கு ஈகோ அதிகம் அவர் வேண்டாம் என்று நிறையப் பேர் சொன்னார்கள் அவரிடம் பழகும் வரை நானே அப்படித்தான் இருந்தேன், அவரது சவுண்டிங் எனக்கு அவ்வளவு பிடிக்கும். படம் மொத்தமாக முடித்துவிட்டு ஹார்ட்டிஸ்க்கில் படத்தை எடுத்துக் கொண்டு போய் தான் அவரைப்பார்த்தேன். அவர் என்னை வித்தியாசமாகப் பார்த்தார், எனக்குப் பிடித்தால் இசையமைக்கிறேன் இல்லாவிட்டால் வேறு நல்ல இசையமைப்பாளர் சொல்கிறேன் என்றார். ஆனால் படம் பார்த்துவிட்டு என்னுடைய கம்பேக் படமாக இப்படம் இருக்கும், நீங்கள் நினைத்ததைக் கொண்டு வர முயற்சிக்கிறேன் என்றார். மிக மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார் அவருக்கு நன்றிகள். படத்திற்கு ஆதரவைத் தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் நந்தகோபால் பேசியதாவது…
பாடல்கள் டிரெய்லர் வசனங்கள் எல்லாமே அருமையாக உள்ளது. படம் குறித்து அனைவரும் பேசிவிட்டார்கள். ஜிஎஸ் பிரதர்ஸ் நவீன் சீதாராமன், பாலா சீதாராமன், லெனின் சீதாராமன் மற்றும் இயக்குநர் மந்திரா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேசியதாவது…
எனக்கு இந்தப்படம் நன்றாக வரும் என்று நம்பிக்கை இருக்கிறது. ஓதுவார் திருவண்ணாமலையில் தினமும் கடவுள் முன் பாடுபவர், என்னைப்பார்க்க வந்தவர் இங்கு வந்து கடவுள் வாழ்த்து பாடினார் அதுவே இப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வாழ்த்து, இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும். நன்றி.

நடிகை இவானா பேசியதாவது…
என்னோட டீம் எல்லோரும் சந்தோஷமாக இருப்பார்கள். 3 வருடமாகச் செய்த படம். இப்போது வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. மந்திரா அண்ணாவை நாச்சியார் டைமில் இருந்து தெரியும் அப்போது தொடங்கிய நட்பு, இண்டஸ்ட்ரி பத்தி எனக்கு நிறையச் சொல்லித் தந்தார். என் குடும்பத்திற்கும் நெருக்கமானவர். இந்தக்கதை சொன்னபோது எனக்காக எழுதியதாகச் சொன்னார். இந்தப்படம் பாடிஷேமிங் பத்தி பேசியுள்ளது. தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் வெங்கட் செங்குட்டுவன் பேசியதாவது..,
எனக்கு என் மேல் நம்பிக்கை இருப்பதை விட நான் ஜெயிப்பேன் என நிறையப் பேர் என்னை நம்பினார்கள், என் அப்பா அம்மா முதல் என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி. என்னை ஹீரோவாக போட்டு படம் எடுக்கலாம் என நம்பிய இயக்குநருக்கு, தயாரிப்பாளருக்கு, என் நன்றிகள். எல்லோரும் கஷ்டப்பட்டு இப்படம் எடுத்துள்ளோம் உங்களுக்குப் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே புகழ் இவானா முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க குள்ளக் கதாப்பாத்திரத்தில் வெங்கட் செங்குட்டுவன் நாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பாவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

Related posts

Leave a Comment