தமிழ்நாடு திரைப்பட விழா (TNFF)-வின் 2வது பதிப்பு தொடங்கியது!

தமிழ்நாடு திரைப்பட விழா (Tamil Nadu Film Festival – TNFF) என்ற பெயரில் சென்னையில் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இத்திரைப்பட விழாவின் முதல் பதிப்பு ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு திரைப்பட விழா (TNFF)-வின் 2வது பதிப்பை நேரடியாக நடத்த திட்டமிட்ட விழாக்குழுவினர், 2024 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சென்னையில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, தமிழ்நாடு திரைப்பட விழா (TNFF) இரண்டாவது பதிப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி சென்னை கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் செண்டரில் தொடங்கியது.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் 22 நாடுகளில் இருந்து 132 திரைப்படங்கள் பங்கேற்றுள்ளன. அதில் இறுதியாக தேர்வு செய்யப்பட்ட 15 நாடுகளைச் சேர்ந்த 75 திரைப்படங்கள் திரையிடப்பட்டு, அந்த திரைப்பட குழுக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. மேலும், வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி, 8 முதல் 12 வயது குழந்தைகளுக்கும், மறுநாள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி, 13 முதல் 18 வயது உள்ளவர்களுக்கான சிறப்பு திரைப்படங்கள் திரையிடப்பட்டு, அப்படங்களின் கலந்துரையாடல் நிகழ்வும் நடக்கிறது.

22 நாடுகளைச் சேர்ந்த 132 படங்களில் இருந்து 15 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அனைத்து திரைப்படங்களும் திரையிடப்படுவதோடு, இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 36 திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. ஒவ்வொரு திரைப்படத்தின் திரையிடலின் போதும், படத்தின் சம்மந்தப்பட்டவர்கள் கலந்துக்கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்வு நடக்கும்.

திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக பங்குபெற்ற திரைப்படங்களுக்கு, புனைக்கதை (Fiction), அனிமேஷன், ஆவணப்படம், குறும்படம், இசை வீடியோ, மாணவர்களால் உருவாக்கப்பட்ட படங்கள் உள்ளிட்ட மொத்தம் 12 பிரிவுகளில் 21 விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள், தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு (Nilgiri Tahr) பெயரில் வழங்கப்படுகிறது. மிகவும் அறிய வகை உயிரினமான நீலகிரி வரையாடுகள் தற்போது அழிந்து வரும் நிலையில் இருப்பதால், அதன் இனத்தை காப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘நீலகிரி வரையாடு விருதுகள்’ (NILGIRI TAHR AWARDS) என்ற பெயரில் விருதுகள் வழங்கப்படுவது தமிழ்நாடு திரைப்பட விழாவின் கூடுதல் சிறப்பம்சமாகும்.

விருது வழங்கும் நிகழ்ச்சி திரைப்பட விழாவின் இறுதி நாளான ஆகஸ்ட் 19 ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு, சென்னை கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் செண்டர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சர்வதேச திரைப்பட விழாவின் முகவராக செயல்பட்டு வரும் ஜே.டி மீடியா புரோமோஷன் நிறுவனத்தின் திருமதி.ஜோசபின் டேவிட், பல திரைப்படங்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத்தரும் பணியை சிறப்பாக செய்து வருகிறார். தற்போது சிறிய படங்கள் மற்றும் அப்படங்களின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நட்சத்திர அந்தஸ்த்து மற்றும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு திரைப்பட விழாவை நடத்துகிறார்.

இந்தியாவில் உருவான திரைப்படங்கள், குறும்படங்கள் உள்ளிட்ட பல படைப்புகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்த ஜே.டி மீடியா புரோமோஷன் நிறுவனம், தற்போது நாம் தயாரிக்கும் திரைப்படங்கள், நமது நாட்டில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

உலக அளவில் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தான் அதிகமான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருவதால், அதில் உள்ள சிறந்த படங்களை நம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதும், அவர்களுக்கு உலக அளவில் அங்கீகாரத்தை பெற்றுக்கொடுப்பதும் தான் இந்த விழாவின் முக்கிய குறிக்கோள்.

மேலும், நம் சமூகத்தில் நம்மை சுற்றி பல சம்பவங்கள் நடைபெறுகிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு சிறந்ததாக இருக்க வேண்டும். அதனால், குழந்தைகள் சம்மந்தப்பட்ட பல விஷயங்களை நாம் பேசுவதற்கான வாய்ப்பாக திரைப்படங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருத்தரை பற்றிய ஒன்றை மட்டுமே பேசாமல், ஒரு பொதுவான கதை மூலமாக நிறைய தலைப்புகளில் சமூகம் சார்ந்த பல பிரச்சனைகள் பற்றி நாம் பேசி நல்ல மாற்றத்தை திரைப்படங்கள் மூலம் கொண்டு வர முடியும், அதனால் நம் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும், என்பதாலும் இத்திரைப்பட விழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment