திகில் மர்மம் கொண்ட பட வரிசையில் வந்திருக்கும் படம் கீனோ. ஆனால் இந்த கீனோவில் இடம் பெறும் திகில் எந்த வகையைச் சேர்ந்தது என்பது தான் படமே.
மகாதாரா பகவத்- ரேணு சதீஷ் தம்பதியருக்கு ஒரே மகன் கந்தர்வா. அவன் தனியாக இருக்கும் போதெல்லாம் மனித உடலும் வித்தியாசமான தலையும் கொண்ட ஓர் உருவம், அவன் முன் தோன்றி, ‘ நான் தான் கீனோ என்னிடம் வா’ என்று அழைக்கிறது. சிறுவன் பயந்து நடுங்க, பெற்றோர் இது ஏதேனும் ஆவி சேட்டையாக இருக்குமோ என்ற கோணத்தில் மந்திரவாதிகளை அழைத்துப் பார்க்கிறார்கள். அவர்கள் அலசி ஆராய்ந்து வீட்டில் தீய சக்தி எதுவும் இல்லை என்று உறுதி கூறுகிறார்கள். ஆனாலும் மறுநாளே வந்து சிறுவன் முன் நிற்கிறது கீனோ. அதே அழைப்பு.அதே மிரட்டல்.உண்மையில் அந்த கீனோ யார்? சிறுவன் கீனோவில் மிரட்டலில் இருந்து விடுபட்டானா என்பது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத கதைக்களம்.
சிறுவன் கந்தர்வா, இந்தப் படத்தின் மொத்த கதைக்கும் மைய முடிச்சாக இருக்கிறார். கீனோவை பார்த்ததும் முதலில் பயந்து பின்பு துணிந்து எதிர்க்கும் எல்லா இடங்களிலும் நடிப்பில் அழகாக ஸ்கோர் செய்து விடுகிறார்.
அப்பாவாக நடித்திருக்கும் மகாதாரா பகவத், நடுத்தர வர்க்க தந்தையை நடிப்பில் பிரதிபலிக்கிறார். மகனின் பயம் கண்டு கலங்கும்போதும், அதற்கு தீர்வு காண முயலும் போதும் நம்மையும் கலங்க வைக்கிறார்.
தாயாக நடித்திருக்கும் ரேணு சதீஷ் வேலையின் நிமித்தம் ஆஸ்திரேலியாவில் இருந்த போதும் மகனின் நலத்தில் காட்டும் அக்கறை பாசமுள்ள தாயை கண் முன் நிறுத்துகிறது. சொந்தவீடு வாங்க வீடு புரோக்கரை டென்ஷன் ஆக்கும் இடங்கள் மட்டும் ஓவர்டோஸாகி விடுகிறது.
ஆலிவர் டேனியின் ஒளிப்பதிவு, கதைக் கேற்ப பணிக்கிறது.கதை, ,திரைக்கதை,வசனம், பாடல்கள், இசையுடன் இயக்குனர் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார் ஆர்.கே.திவாகர்.
கீனோவாக நடித்திருப்பதும் அவரே.
எதற்காக ஒரு உருவம் ஒரு சிறுவனைக் குறி வைத்துத் தொடர வேண்டும்? என்கிற கேள்விக்கான விடையை உளவியல் ரீதி வரை அணுகிய விதத்தில் சிறந்த இயக்குனராகவும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
கீனோ, ‘நோ’ சொல்ல முடியாதவன்.