ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் இயக்கத்தில் நடிகர்கள் பிரியங்கா மோகன் மற்றும் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ’மேட் இன் கொரியா’ இரண்டு கலாச்சாராங்களை ஒன்றிணைக்கிறது.
மும்பை, 24 பிப்ரவரி 2026: குழந்தைப் பருவத்தில் கேட்ட கதைகள், வகுப்பறையில் அமர்ந்திருக்கும் தருணங்கள் அல்லது வீட்டைத் தாண்டிய தொலைதூர உலகங்களில் என எதிர்பாராத இடத்தில் இருந்துதான் கனவுகள் தொடங்குகின்றன. செண்பாவுக்கும் இது விதிவிலக்கல்ல! தமிழ்நாட்டின் ஒரு சிறிய ஊரில் தனது அன்றாட வாழ்க்கையை தாண்டி, ஒருநாள் தென் கொரியாவுக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற கனவு செண்பாவுக்கு இருக்கிறது. அந்த கனவு நனவாகும் வாழ்க்கைப் பயணத்தை சொல்லும் ‘மேட் இன் கொரியா’ நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வரும் மார்ச் 12 முதல் ப்ரீமியர் ஆகிறது.

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் எழுதி இயக்கியுள்ள ‘மேட் இன் கொரியா’ செண்பா என்கிற செண்பகத்தின் கதையை சொல்கிறது. கொரிய கலாச்சாரத்தின் மீது சிறுவயது முதலே ஈர்ப்பு கொண்டவளான செண்பா அதை அனுபவித்து பார்க்க வேண்டும் என விரும்புகிறாள். சியோலில் எதிர்பாராத விதமாக அவளுக்கு அந்த அனுபவம் கிடைக்கிறது. ஆனால், அவள் கற்பனை செய்ததை விட யதார்த்தம் பல சவால்களை அவள் முன் நிறுத்துகிறது. அதைத்தாண்டி அவளின் சுயத்தை கண்டுபிடிக்கும் நெகிழ்ச்சியான இந்தப் பயணமே ‘மேட் இன் கொரியா’.
படம் குறித்து இயக்குநர் ரா. கார்த்திக் பகிர்ந்து கொண்டதாவது, “கொரிய மற்றும் தமிழ் கலாச்சாரங்களுக்கு இடையில் ஒரே மாதிரியாக உள்ள ஆழமான பல வரலாற்று ஒற்றுமைகள் என்னை ஈர்த்தன. அந்த ஆர்வமே என் மனதுக்கு நெருக்கமான இந்த நம்பிக்கையூட்டும் கதையை சொல்ல தூண்டியது. மொழிகளைத் தாண்டி உலக கலாச்சாரங்களை இணைக்கும் கதைகளுக்கு ஆதரவு அளிக்கும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி” என்றார்.
நெட்ஃபிலிக்ஸ் இந்தியா கண்டெண்ட்டின் வைஸ் பிரசிடெண்ட் மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “தென்னிந்தியாவில் நெட்ஃபிலிக்ஸை மேலும் வலுப்படும் இந்த சூழலில், உள்ளூர் கலாச்சாரத்தில் வேரூன்றிய கதைகளை உலகளவில் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். கொரிய கலாச்சாரத்தின் மீது ஈர்ப்பு கொண்ட ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கனவு உலகத்தை ‘மேட் இன் கொரியா’ காட்டும். ரா. கார்த்திக் எழுதி, இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். பிரியங்கா மோகன் மற்றும் ’ஸ்க்விட் கேம்’ புகழ் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்த கதை இந்தியா மற்றும் கொரியாவுக்கு இடையிலான கலாச்சாரப் பாலமாக திகழ்கிறது. இந்தக் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் நெட்ஃபிலிக்ஸ் பெருமை கொள்கிறது” என்றார்.
செண்பாவின் உணர்வுப்பூர்வமான பயணத்தை தனது திறமையான நடிப்பில் பிரியங்கா மோகன் கொண்டு வந்துள்ளார். இந்தப் படத்தில் தென் கொரிய நடிகர்களான பார்க் ஹை-ஜின் மற்றும் நோ ஹோ-ஜின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தனது கதாபாத்திரம் குறித்து நடிகை பிரியங்கா மோகன் கூறுகையில், “கொரியாவைப் பற்றி செண்பாவின் கனவுகள் வியப்பும் ஆர்வமும் நிறைந்தது. இந்தக் கதையை முதலில் கேட்டபோதே மிகவும் பிடித்துவிட்டது. நெட்ஃபிலிக்ஸூடன் இணைந்திருப்பது இந்தப் பயணத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளது”.
கலாச்சாரங்களுக்கிடையேயான தொடர்பு, ஆர்வம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றுடன் ஒருவரின் உணர்வுப்பூர்வமான வளர்ச்சி, நட்பு மற்றும் சுயத்தை கண்டுபிடித்தல் ஆகியவற்றை இந்தக் கதை பேசுகிறது.
நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் ப்ரீமியர் ஆகிறது.

