‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. பத்திரிகையாளர்களுக்கான திரையிடல் மற்றும் சிறப்பு திரையிடலில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் மற்றும் இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பான வரவேற்பு காரணமாக, பார்வையாளர்கள் மத்தியிலும் படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 150-க்கும் அதிகமான திரைகளில் படம் வெளியாகிறது.
தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் பகிர்ந்து கொண்டதாவது, “ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் உருவாகியுள்ள ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் அதிகளவில் பார்வையாளர்களை சென்றடைவது மிகவும் முக்கியம். அதற்கு அனுபவம்மிக்க விநியோகஸ்தர்களின் ஆதரவு அவசியம். சக்திவேலன் சார் போன்ற முன்னணி விநியோகஸ்தர்களின் ஆதரவு கிடைப்பது எந்த திரைப்பட இயக்குநரும் விரும்பும் விஷயம். சக்தி பிலிம் பேக்டரி பல தனித்துவமான கதைக்களம் கொண்ட, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய திரைப்படங்களை தொடர்ந்து ஊக்குவித்து, அவற்றை தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. எங்கள் திரைப்படத்தை வெளியிட அவர் முன்வந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. அவருடைய ஆதரவு ’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படத்தை மேலும் பல பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி பகிர்ந்து கொண்டதாவது, “’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக, முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இளைஞர்களை கவரும் பல தருணங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. படத்தின் திரைக்கதை பார்வையாளர்களை கட்டிப்போடும் விதமாக அமைந்துள்ளது என என்னுடன் படம் பார்த்தவர்களும் ரசித்து பாராட்டினர். முழு அணியும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தப் படத்திற்காக உழைத்துள்ளது. இந்த படம் திரையரங்குகளில் பார்வையாளர்களை நிச்சயம் மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.
’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் மார்ச் 6, 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

