தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனது 29வது திரைப்படத்தை பூஜையுடன் இன்று தொடங்கியது.
கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தை எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். விஷால் நடித்த ‘சக்ரா’ படத்தை இதற்கு முன்னர் இவர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’ என்று அழைக்கப்படும் இந்த படத்தில் ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக் மற்றும் அருள் தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்த இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன், “தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியிலேயே அமர வைக்கும் விறுவிறுப்பான அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இது அமையும். அதே சமயம், நகைச்சுவை போன்ற இதர சுவாரஸ்யமான அம்சங்களும் சரியான அளவில் இடம்பெறும். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இப்படத்தை இயக்குவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்று தெரிவித்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும். இந்த திரைப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பங்காற்றுகின்றனர்.
‘கேஜிஎஃப்’ மற்றும் சமீபத்திய ‘பிளாஸ்ட்’ படங்கள் மூலம் பிரபலமான ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்; பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். படத்தொகுப்பை பிரதீப் இ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை ஃபீனிக்ஸ் பிரபு இயக்க, தினேஷ் மனோகரன், பல்லவி சிங் மற்றும் செல்வி தங்கராஜ் ஆகியோர் ஆடை வடிவமைப்பாளர்களாகவும், டூனி ஜான் விளம்பர வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியா மோகன், யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’ படத்தின் பூஜை இன்று (செப்டம்பர் 6) நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு வரும் 10ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

