அதிமுகவில் இருந்துயார் சென்றாலும் கட்சிக்கு பாதிப்பு இல்லை-ஒபிஎஸ்

அதிமுக என்பது ஒரு ஆலமரம். இதிலிருந்து யார் சென்றாலும் பாதிப்பு இல்லை என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்திய போது அவருக்கு உறுதுணையாக ஆதரவாக நின்றவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம். தற்போது அவர் திமுகவில் இணைந்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்து கொண்டார்.

இது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காகச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம்  (மார்ச் 21) மதுரை வந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

அவரிடம், தர்ம யுத்தத்தின் போது உங்களுக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.முத்துராமலிங்கம் அதிமுகவிலிருந்து விலகியதற்குக் காரணம் என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த ஓபிஎஸ், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மிகப்பெரிய ஆலமரம், இதிலிருந்து யார் சென்றாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்றார்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் கிடைக்காத அதிமுக நிர்வாகிகள், திமுக- அமமுகவில் இணைவது அதிமுகவின் ஓட்டு வங்கியைப் பாதிக்குமா? என்ற கேள்விக்கு, ”எந்தவித பாதிப்பும் இல்லை. அதிமுகவின் வெற்றி வாய்ப்பு இப்போதும் தமிழகத்தில் பிரகாசமாக இருக்கிறது” எனப் பதிலளித்தார்.

Related posts

Leave a Comment