சோனியா, பிரியங்காவை சந்திக்காத ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

இதுபற்றி இன்று (ஏப்ரல் 20) தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து வெளியிட்டிருக்கும் ராகுல் காந்தி,

“லேசான அறிகுறிகளை அனுபவித்த பிறகு, நான் சோதனை செய்துகொண்டதில் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.. சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவருமே, தயவுசெய்து அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்திக்கு வயது 50.

“ராகுல் காந்தி கடந்த 12 நாட்களாகவே சோனியா காந்தியை சந்திக்கவில்லை. மேலும் கடந்த 5 நாட்களாக தனது சகோதரியான பிரியங்காவையும் சந்திக்கவில்லை. மருத்துவர்களின் அறிவுரைப்படி தனது வீட்டிலேயே இருந்து வருகிறார். தனக்கு உள்ளூர காய்ச்சல் போல இருந்ததால்தான், ராகுல் முன்னெச்சரிக்கையாக மேற்கு வங்காளத்தில் தான் செய்ய இருந்த பிரச்சாரப் பயணங்களை ரத்து செய்துவிட்டார்” என்கிறார்கள் ராகுலுக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.

ராகுல் காந்திக்கு கொரோனா என்ற தகவல் வெளியானதும் தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி, “ மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் நல்ல ஆரோக்கியம் மற்றும் விரைவான மீட்புக்காக நான் பிரார்த்திக்கிறேன்”என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கொரோனா தடுப்பு குறித்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் இன்று ராகுல் காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

Leave a Comment