பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கி, நடித்த ‘லவ் டுடே’ படம் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படமும் தமிழ் தெலுங்கில் பெரும் வெற்றியடைந்தது. அடுத்தடுத்த வெற்றி படங்களின் மூலம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் தனக்கான இடத்தை பிரதீப் ரங்கநாதன் பிடித்திருக்கிறார். இப்பொழுது பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை அறிவித்திருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தின் மூலம் கீர்த்தீஸ்வரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு பல பெரிய படங்களில் அவர் உதவி இயக்குநராக பணிபுரிந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று #PR04 திரைப்படம் பிரம்மாண்டமான பூஜையுடன் தொடங்கியது. படத்தின் முதல் காட்சி பிரதீப் ரங்கநாதன் இடம் பெறும்படி படமாக்கப்பட்டது. தீவிரமான காட்சிகளுடன் தொடங்கி விளையாட்டான முத்தத்துடன் இந்த காட்சி முடிவடைந்தது. இதிலிருந்து இந்த படம் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட் சார்ந்து ஒரு நியூ ஏஜ் கதையாக இருக்கும் என்ற நம்பிக்கை கொடுக்கிறது.
‘பிரேமலு’ படப்புகழ் மமிதா பைஜு இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
திறமை வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தில் பணிபுரிகிறார்கள். வளர்ந்து வரும் மியூசிக்கல் சென்சேஷன் சாய் அபயங்கர் படத்திற்கு இசையமைக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவை கையாளுகிறார். லதா நாயுடு தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், பரத் விக்ரமன் எடிட்டராகவும் பணியாற்றுகிறார்.
படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.