சந்தீப் கிஷன் நடிப்பில், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் பான்-இந்திய ஃபேண்டஸி திரைப்படம்!

தெலுங்கு மொழியில் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற ‘சம்பாலா’ படத்தினைத் தொடர்ந்து, அந்தப் படத்தை தயாரித்த Shining Pictures நிறுவனம் மீண்டும் இயக்குநர் உகந்தர் முனியுடன் கைகோர்த்து, மற்றுமொரு பிரம்மாண்டமான புதிய திரைப்படத்தைத் தொடங்கியுள்ளது. தயாரிப்பாளர்கள் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு ஆகியோர் முன்னதாக ஆதி சாய்குமார் நடித்த “சம்பாலா”படத்தின் மூலம் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தனர்.

இந்த புதிய பட அறிவிப்பை முன்னிட்டு, படக்குழு ஒரு கண்கவர் கான்செப்ட் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், சிங்கம் மற்றும் ஓநாய் நேருக்கு நேர் மோதும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது அதிகாரம், விதி, மற்றும் உள்ளார்ந்த வலிமையின் மாபெரும் மோதலை சுட்டிக்காட்டுகிறது. இவ்விரண்டுக்கும் நடுவே, மர்மமான போர்க்களப் பின்னணியில் ஒளிரும் ஒரு பழமையான வாள் காட்சியளிக்கிறது. மேலும், “சில போர்கள் ஒருபோதும் முடிவதில்லை… சில மன்னர்கள் ஒருபோதும் இறப்பதில்லை” என்ற வலிமையான டேக்லைன், இந்த படைப்பு ஒரு பிரம்மாண்டமான ஃபேண்டஸி சாகசமாக உருவாகிறது என்பதைக் குறிப்பதாக உள்ளது.

இந்த புதிய படத்தில் திறமையான முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். தனது உற்சாகமான திரை கவர்ச்சி, பன்முக நடிப்பு திறன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் தனித்த அடையாளம் பெற்றுள்ள சந்தீப் கிஷன், இந்த சோஷியல் – ஃபேண்டஸி திரில்லர் படத்தில் முற்றிலும் புதிய பரிமாணத்தில் தோன்றவுள்ளார். இதுவரை காணாத ஒரு சக்திவாய்ந்த அவதாரத்தில் அவர் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார்.

பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற “சம்பாலா” படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளர்களும் இரண்டாவது முறை இணைகிறார்கள் என்பதால், இந்த முறை படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப தரத்தை மேலும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம், சந்தீப் கிஷனின் திரை வாழ்க்கையிலேயே அதிக செலவில் உருவாகும் படங்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. தயாரிப்பு வடிவமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ், மற்றும் கதை சொல்லல் என அனைத்து அம்சங்களிலும் பார்வையாளர்களுக்கு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கபடவுள்ளது.

இந்த படக்குழு நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவரும் ஒரு பிரம்மாண்டமான சோஷியல் -ஃபேன்டஸி படத்தை உருவாக்கி வருகிறது. பல மொழிகள் மற்றும் பல கலாசார பின்னணிகளைக் கொண்ட ரசிகர்களை சென்றடையும் வகையில், இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான பான்-இந்தியா படமாக உருவாகிறது.

“சம்பாலா” படத்தின் போது தங்களின் தரமான தயாரிப்பும், வலுவான புரமோஷன் அணுகுமுறை மூலம் கவனம் பெற்ற Shining Pictures, இந்த புதிய படத்திலும் அதே தரத்தையும், அதற்கு மேலான சிறப்பையும் வழங்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இப்படத்தின் கதைக்களம் தற்போது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், ஃபேண்டஸி அம்சங்களும், வணிக ரீதியான மக்களை கவரும் மசாலா அம்சங்களும் கலந்து இருக்கும் தனித்துவமான அனுபவமாக இந்த படம் அமையும் என படக்குழு உறுதியளித்துள்ளது.

நடிப்பு குழு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த மேலும் பல சுவாரஸ்யமான அப்டேட்கள் விரைவில் வெளியாக உள்ளன. தற்போது முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் படப்பிடிப்பு 2026 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படமாக்கப்படவுள்ளது.

Related posts

Leave a Comment