ஹிப்ஹாப் தமிழா கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என சகல துறைகளிலும் கால் பதித்து வெளிவந்த திரைப்படம் “மீசைய முறுக்கு”. சுந்தர்.சி தயாரித்திருந்த இப்படம் 2017-இல் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், தற்போது ஹிப்ஹாப் தமிழா கதை- திரைக்கதை-வசனம்- இயக்கத்தில் “மீசைய முறுக்கு-2” படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, பாலிவுட் நடிகை கேட்டிகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார், யோகி பாபு, கருணாஸ், ஹர்ஷத் கான் , ‘ஆடுகளம்’ நரேன், நாசர், ரம்யா ரங்கநாதன், ஷா ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அவ்னி மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ.சி.எஸ் அருண்குமார் மற்றும் குஷ்பூ சுந்தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருத்துள்ளனர்.

படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் டைட்டில் டீசர்- ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இப்படத்தில் இடம்பெற்ற ‘ஆரா பத்துக்கு பத்து’ எனும் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் சர்வதேச அளவில் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்க, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
தற்போது, இப்படத்தின் இரண்டாவது பாடல் “பப்பாளி பழமே” புதன் கிழமை மாலை வெளியானது. கானா வினோத், கானா தரணி, ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ள இப்பாடலுக்கு, நடனம் பாபா பாஸ்கர். கானா ஸ்டைலில் வெளியாகி இருக்கும் இப்பாடல் இணைய தளங்களில் டிரெண்டாகி வருகிறது. 
