ராஜேந்திரபாலாஜியின் திட்டம் ராஜபாளையத்தில் நிறைவேறுமா

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த இரு தேர்தல்களில் வெற்றி பெற்று அமைச்சர் பொறுப்பு வகித்து வந்த கே.டி. ராஜேந்திர பாலாஜி, தோல்வி அச்சத்தில் தற்போது ராஜபாளையம் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுவதாக அதிமுகவினரே தெரிவிக்கின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் ராஜபாளையம் தொகுதியில் அதிமுக வெற்றிபெறுவது எளிதான காரியமில்லை என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள். ராஜபாளையம் யூனியன் முழுவதும் திமுக ஓட்டு அதிகம் தற்போது ராஜபாளையம் நகரிலும் திமுக செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில் வெற்றி கொடிநாட்ட அங்கு வந்துள்ளார் கேடிஆர்.

அருப்புக்கோட்டை அருகேயுள்ள குருந்தமடம் பகுதியைச் சோ்ந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, சிறு வயதில் பெற்றோருடன் திருத்தங்கல் பகுதியில் வசித்து வந்தாா். தீவிர எம்ஜிஆா் ரசிகரான இவர், நகராட்சி வாா்டு உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டு திருத்தங்கல் நகா்மன்ற துணைத் தலைவா் பதவி வகித்தார்.

கடந்த 2011இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் சிவகாசி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடா்ந்து அவருக்கு மாவட்டச் செயலர் பதவி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சா் பதவியும் கிடைத்தது.

பின்னா், 2016 இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு பால்வளத்துறை அமைச்சா் பதவி கிடைத்தது. அடிக்கடி தடாலடியாகக் கருத்து தெரிவிக்கும் இவரை அதிமுக தலைமையே எச்சரிக்கும் நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில் சிவகாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால் சக கட்சியினரே பல்வேறு காரணங்களால் தோல்வியை ஏற்படுத்த வரிந்து கட்டி நிற்பதாகவும் அதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக ராஜபாளையம் தொகுதியில் வேட்பாளராக நிற்க விரும்பி கட்சி தலைமையிடம் வேட்பு மனு தாக்கல் செய்ததாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால், கட்சித் தலைமையோ, அமைச்சராக இருந்த ஒருவர் தொகுதி மாறுவது ஏற்புடையதல்ல, மீண்டும் சிவகாசி தொகுதியில் போட்டியிட அறிவுறுத்தியுள்ளனா். ஆனாலும், அவர் ராஜபாளையம் தொகுதியில் தன்னால் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டவர்களால் தான் எளிதாக வெற்றி பெற முடியும் என கூறி அத்தொகுதியைத் தர வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ராஜபாளையத்தில் வீடு எடுத்துத் தங்கி தனக்கு பாஜக சாா்பில் சீட் கிடைக்கும் என நம்பி நடிகை கவுதமி பிரசாரம் மேற்கொண்டு வந்தாா். அவருக்கு ஆதரவாக பாஜக மாநில நிா்வாகிகள், தேசிய நிா்வாகிகளும் பிரசாரம் மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் வேட்பாளராக அதிமுக சாா்பில் அறிவிக்கப்பட்டிருப்பது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related posts

Leave a Comment