புதுச்சேரியில் அதிமுகவை அலைகழிக்கும் பாஜக தலைமை

பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் அதிமுக, என். ஆர். காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன இடம்பெற்றபோதும், தொகுதி பிரச்சினையில் பாமக தனியாகப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது.

என்.ஆர்.காங்கிரசும் பாரதிய ஜனதாவும் தொகுதி உடன்பாடு செய்து முடித்துவிட்டன. என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்கள், பாஜக 14 இடங்கள் அதில் அதிமுகவுக்கு 4 தொகுதிகள் தருவதாக உடன்பாடு கண்டனர். ஆனால் இப்போது அதிமுகவுக்கு மூன்று தொகுதிகள்தான் தரமுடியும் என பாஜக மாற்றிப்பேசுவதாக புதிய பிரச்சினை எழுந்திருக்கிறது. பாஜக நிர்வாகிகள் இதுதான் எங்கள் நிலைப்பாடு என கறாராகப் பேச, அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாஜக நிர்வாகிகளிடம், ” நாங்கள் சிட்டிங் எம்.எல்.ஏ.க்களே நான்கு பேர் இருக்கிறோம்; அதனால்தான் எட்டு தொகுதிகள் வேண்டும் எனக் கேட்டோம்; 4 தொகுதிகள் தருவதாகச் சொன்னீர்கள்; அதை ஏற்றுக்கொண்டோம். ஆனாலும் அதன்பிறகும் ஒரு தொகுதியைக் குறைத்தால் என்ன இது..?” என கொந்தளித்துப்போனார்கள். புதுவை அதிமுகவின் மேலிடப் பொறுப்பாளரான தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்திடம் விவகாரத்தைக் கொண்டுபோனார்கள்.

அவர் நேற்று புதுவை அக்கார்டு ஓட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் சுரானாவிடம் பேசினார். அந்தப் பேச்சுவார்த்தையில், பாஜக தரப்பில், “எங்களுக்கு ஆட்கள் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு சீட் இல்லை என்று சொல்லமுடியாது; இந்த ஒரு முறை நீங்க ஹெல்ப் பண்ணுங்க; மற்ற மூன்று தொகுதிகளில் மட்டும் போட்டியிடுங்கள்.” என்று அவரிடமும் சொல்லியிருக்கின்றனர்.

அதைக் கேட்டு அப்செட்டான அமைச்சர், பதிலேதும் கூறாமல், “ நான் முதல்வரிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்.” எனக் கிளம்பிவிட்டார்.

நடந்த விவரத்தை அப்படியே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சம்பத் எடுத்துச்சொல்லி இருக்கிறார். அவரோ, ”பொறுங்க.. இரண்டு நாட்கள் போகட்டும்.. சொல்கிறேன்..” என்று கூறியுள்ளார்.

இந்த நிலைமையில் இன்று வேட்புமனு தாக்கலே தொடங்கிவிட்டது. தேர்தலுக்கு இன்னும் 25 நாள்கள் மட்டுமே இருக்கின்றன.

இன்னமும் தொகுதி உடன்பாடே இழுபறியாக இருப்பதால், புதுச்சேரியில் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

Related posts

Leave a Comment