களத்தில் போட்டி வேட்பாளர் நேரில் மரியாதை நெகிழ வைத்த வேட்பாளர்கள்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்ட போது கைகுலுக்கியது இரு கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வரவிருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த்தும் போட்டியிடவுள்ளனர்.  கன்னியாகுமரியில் பாஜக வெற்றி பெறுமா? காங்கிரஸ் வெற்றி பெறுமா? என கடுமையான போட்டி நிலவி வருகிறது.  விஜய் வசந்த்துக்குக்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும்,  பொன் ராதாவுக்கு  உள் துறை அமைச்சர் அமித்ஷாவும் வாக்கு சேகரித்தனர். இதனால் கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் தேர்தல் முடிவுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

இந்நிலையில், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வுக்குக்  கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார் பொன் ராதாகிருஷ்ணன். அதுபோன்று விஜய் வசந்த்தும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது  இருவரும் நேருக்கு நேர் சந்தித்து, கைக்குலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து விஜய் வசந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற போது பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்துகள் பரிமாறிக் கொண்டோம். அவரை போன்ற மூத்த அரசியல்வாதியைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. களத்தில் போராட்டம் இருப்பினும் தனிநபர் மரியாதை என்றும் பேணி காப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment