கோவைக்குவிருந்தாளியார்? கமலுக்குவானதி சீனிவாசன் கேள்வி

கொங்கு மண்டலத்துடன் என்னுடைய தொடர்பைப் பிரித்துக் காட்டக் கமல் முயன்றால் நிச்சயம் அதில் தோல்வி அடைவார் என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி, மிகவும் எதிர்பார்ப்புக்குரிய ஒரு பகுதியாக இருக்கிறது. முதன்முதலாகச் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.

இருவரும் மக்களை நேரடியாகச் சந்திப்பது , பரப்புரை மேற்கொள்வது என தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கமலுக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாகச் சிறிது ஓய்விலிருந்தார்.

இதை அறிந்த வானதி சீனிவாசன், கோவை பகுதிக்கு, விருந்தினராக வந்திருக்கும் கமல்ஹாசன் அவர்களின் உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி பழ கூடை ஒன்றை அனுப்பினார்.

வானதி சீனிவாசன் விருந்தினர் என்று கூறியது தற்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. தன்னை விருந்தினர் என்று சொல்லியதற்கு ஆவேசமாகப் பதிலளித்துள்ள கமல்ஹாசன், “வானதி சீனிவாசன் என்னை விருந்தினர் என கிண்டல் செய்திருக்கிறார். கிண்டல் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னைப் போன்று நீங்களும் (வானதி சீனிவாசன்) இந்த தொகுதியின் விருந்தினர் தான்.

எங்களையாவது வாருங்கள் என்று சொல்கிறார்கள். உங்கள் தலைவரை கோ பேக் என்று சொல்கிறார்கள். நான் பரமக்குடியில், பிறந்து ராமநாதபுரத்தில் வளர்ந்து, சென்னை, மும்பை வரை சென்று இருக்கிறேன். இப்போது கோவையில் நிற்கிறேன். எனக்குச் சொந்த ஊர் என்று எதுவும் கிடையாது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தான் எனது கொள்கை” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதிக்கு நான் விருந்தாளி என கமல் சொல்லி இருக்கிறார். அவரை சுற்றியுள்ள இந்த ஊர்க்காரர்களிடம் நான் எங்கு பிறந்தேன் வளர்ந்தேன், என் குடும்பம் எங்கே இருக்கிறது என தெரிந்து கொள்ளட்டும். கொங்கு மண்டலத்துடனான என்னுடைய தொடர்பைப் பிரித்துக் காட்டக் கமல் முயன்றால் நிச்சயம் அதில் தோல்வியடைவார் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment