தேசத்தை விற்றுவிடுவார்கள்- நாம் தமிழர்சீமான்

நோட்டுக்கு வாக்கை விற்காதீர்கள், அவர்கள் வாக்கைப் பெற்றுக்கொண்டு நாட்டை விற்றுவிடுவார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருப்போரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எல்லா திட்டங்களைக் கொண்டு வந்து, வாழ்வதற்கு வாய்ப்பற்ற ஒரு நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். இதை எதிர்த்துப் போராடினால் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்கின்றனர்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் கழிவுகளைக் கடலில் கொட்டுகிறார்கள். இதனால் மிக பெரிய பாதிப்பைச் சந்திக்கிறோம். கல்பாக்கம் அணு உலையால் சுற்றுவட்டார 14 கிராமங்களில் பத்திரப்பதிவே செய்ய முடியாத நிலை உள்ளது. அணுக்குண்டு மேல் அமர்ந்திருப்பதும் அணு உலை அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

காற்றாலைகள் கடற்கரை ஓரம் வைப்பதை விட்டுவிட்டு விளையும் நிலங்களில் அமைக்கின்றனர். நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல் வேறு நாட்டிலிருந்து வாங்குகிறோம். 19,000 கோடி மின்சாரம் வாங்குவதற்காக முதலீடு செய்கின்றனர், அதுவே உற்பத்தி செய்ய ஏன் முதலீடு செய்வதில்லை. ஏனென்றால் உற்பத்தி செய்தால் கமிஷன் கிடைக்காது. தமிழக மக்கள் முதலமைச்சர்களைத் தேர்வு செய்வதில்லை. சாராய ஆலை அதிபர்களைத் தேர்வு செய்கிறீர்கள்.

இந்தத் தேர்தலுக்காக இரு கட்சிகளும் 5,000 கோடி முதலீடு செய்கிறது. நீங்கள் நோட்டுக்கு வாக்கை விற்கிறீர்கள், அவர்கள் வாக்கை வாங்கிக்கொண்டு நாட்டை விற்கிறார்கள்.

மத்திய அரசு, எல்ஐசி, ரயில்வே உள்ளிட்ட எல்லாவற்றையும் தனியார் மயமாக்குகிறது. பணம் இருந்தால் பதவிக்கு வந்துவிடலாம் என்ற நிலை வந்துவிட்டது.

50 ஆண்டுகளாக ஒன்றும் செய்யாதவர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் செய்துவிடுவார்களா? எனவே நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளியுங்கள். மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என்று கூறி விவசாய சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

Related posts

Leave a Comment