தினகரன் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுவதை அடுத்து ஸ்டார் தொகுதியாகிவிட்டது. அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூவும், திமுக கூட்டணியில் சிபிஎம் சார்பில் சீனிவாசனும் களத்தில் நிற்கிறார்கள்.

கட்சிகளுக்கு இடையேயான போட்டியாக வெளியே பேசப்பட்டாலும் கோவில்பட்டியில், “ரெண்டு நைனாவும் ஒரு தேவமாரும் மோதுறாங்கலே’ என்றே ‘சுருக்’கெனச் சொல்கிறார்கள்

டிடிவி தினகரன் கோவில்பட்டியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தனதுதளபதிஎன்றுமாணிக்கராஜாவை சொல்லி அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தமிழகம் முழுக்க பிரச்சாரத்துக்குக் புறப்பட்டுவிட்டார். ஆனால் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூவும், திமுக கூட்டணியின் சிபிஎம் சீனிவாசனும் தொகுதிக்குள் இண்டு இடுக்கு விடாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

தினகரன் மீண்டும் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில்தான் தொகுதிக்கு வருகிறார். அதற்குள் மாணிக்கராஜா ஒவ்வொரு கிராமமாக சென்று சூறாவளியாக வாக்கு வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்.

கடந்த 2016 தேர்தலில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுப்பிரமணியனை எதிர்த்து கடம்பூர் ராஜூ வெறும் 428 ஓட்டுகளில் வெற்றிபெற்றார். அமைச்சரும் ஆகிவிட்டார். ஆனால் அப்போது அதிமுகவுக்கு போட்டியாக அமமுக என்ற கட்சி கிடையாது. அதுவும், டிடிவி தினகரனே நிற்கவும் இல்லை. இப்போது அமமுக சார்பில் தினகரனே நிற்பதால் கடம்பூர் ராஜூ டென்ஷனாகத்தான் இருக்கிறார்.

தொகுதிக்குள் தேவர் சமுதாய ஓட்டுகள் மட்டும் 73 ஆயிரம் இருக்கிறது. இவற்றில் ஒன்றைக் கூட விட்டுவிடக் கூடாது, முடிந்தவரை இந்த அனைத்து ஓட்டுகளையும் வாக்குச் சாவடிக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட வேண்டுமென்பதுதான் மாணிக்கராஜாவின் முதல் அஜெண்டா. அதற்குப் பிறகு தினகரனின் தலைவர் இமேஜ், கரிஷ்மா உள்ளிட்ட விஷயங்கள் அவரது வெற்றியை இட்டுச் செல்லும் என்பது அமமுகவினரின் நம்பிக்கை.

அதேநேரம் மார்க்சிஸ்ட் கட்சிக்காக திமுக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது. திமுகவிலேயே சில பல நிர்வாகிகள் அமமுகவின் பாசவலைக்குள் சிக்கிக் கொண்டிருப்பதை அறிந்த தூத்துக்குடி எம்பியான கனிமொழி கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு நிர்வாகியையும் அழைத்து, “கூட்டணிக் கட்சி என்ற அலட்சியம் காட்டிவிடக் கூடாது. நாமே நிற்பதாக நினைத்து வேலை பாருங்கள். வேறு எந்த அடிப்படையிலும் வேலை பார்க்க வேண்டாம்”என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்

இதற்கிடையில் பிரச்சாரத்தில் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் கடம்பூர் ராஜூவைத் தொடர்புகொண்டு, “தொகுதி எப்படி இருக்கிறது?” என்று அடிக்கடி விசாரித்து வருகிறார். அந்த வகையில் இன்று (மார்ச் 26) மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவில்பட்டி வருகிறார். கயத்தாறு பகுதியில்

ஒரு பாயின்ட் மட்டும் பேசத் திட்டமிட்டிருக்கிறார். தன் வருகைக்கு முன்னதாக கடம்பூர் ராஜூவிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தினகரனை சட்டமன்றத்துக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். அப்போதுதான் அவரது அடுத்த கட்ட அரசியல் பயணத்தை தடுத்து நிறுத்த முடியும். என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்க. எல்லா உதவியும் கிடைக்கும். ரொம்ப விழிப்பா இருங்க”என்று அலர்ட் செய்திருக்கிறார்.திமுக, அதிமுக இரு கட்சிகளுமே தினகரனைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றன.

Related posts

Leave a Comment