சசிகலாவை சுற்றும் அரசியல் நெருக்கடி மெளனம் கலைப் பாரா

சென்னை தி நகர் அபிபுல்லா சாலையில் குடியிருந்துவரும் சசிகலா மௌனத்தைக் கலைக்கக் காத்திருப்பதால் தொடர் பயணத்தில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுக்காலம் பெங்களூரு சிறையிலிருந்தவர் விடுதலையாகி, பிப்ரவரி 8ஆம் தேதி, சென்னைக்கு வந்தார். திடீரென மார்ச் 3 ஆம் தேதி அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக தெரிவித்தார்.

ஆனாலும் அவரது அரசியல் நடவடிக்கைகள் ஓயவில்லை என்பதை அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன. கடந்த வாரம் தஞ்சைக்கு பயணம் மேற்கொண்ட சசிகலா அங்கே கும்பகோணம், ஒரத்தநாடு அமமுக வேட்பாளர்கள் தன்னை சந்தித்தபோது அவர்களுக்கு வாழ்த்து சொல்லி அவர்களோடு போட்டோவும் எடுத்துக்கொண்டார். அதன் பின் திருச்சி சென்றபோது அமமுக ஸ்ரீரங்கம் வேட்பாளரான சாருபாலா தொண்டைமான் சசிகலாவை சந்தித்தார்.

இந்த நிலையில்தான் திடீரென அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா பற்றிய தனது மாதக் கணக்கிலான மௌனத்தை உடைத்தார். “சசிகலா மேல் எனக்கு எந்த சந்தேகமோ மதிப்புக் குறைவோ கிடையாது. அவர் நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார். அம்மாவுக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரோடு பயணித்திருக்கிறார். அதிமுகவின் இப்போதைய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செட்டப்பை அவர் ஏற்றுக் கொண்டால் அவரை அதிமுகவில் சேர்க்க பரிசீலிக்கலாம்”என்று கூறினார். மேலும் அண்மையில் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சேலத்தில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியபோது தென் மாவட்ட வாக்குகளை அடிப்படையாக வைத்து சசிகலா மீது சாஃப்ட் கார்னர் வெளிப்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்தாலும் அவரை விட்டு அரசியல் ஒதுங்குவது மாதிரி தெரியவில்லை.

இனிமேல் சசிகலா வீட்டுக்குள்தான் முடங்கியிருக்கப் போகிறார் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில் மார்ச் 24ஆம் தேதி, போயஸ் கார்டன் சென்று அங்கிருந்த பிள்ளையார் கோயில் மற்றும் சிவன் கோயிலில் தரிசனம் செய்துட்டு திருவொற்றியூர் கோயிலுக்கு சென்றுள்ளார். திடீரென சசிகலாவை பார்த்த கோயில் குருக்கள், ‘அம்மா கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க.விசேஷ அர்ச்சனை செய்துடலாம்’என்று சொல்ல, அதெல்லாம் வேண்டாம் என்று சாமியைத் தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

துணை முதல்வர் ஒபிஎஸ் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு போன்றவர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக பேசிவருகிறார்கள். இந்த நிலையில்தான் சசிகலா கோயில்களுக்கு செல்வதுபோல பயணம் மேற்கொண்டாலும் அந்த ஒவ்வொரு பயணத்திலும் சில அரசியல் சந்திப்புகளும் நடக்கிறது என்கிறார்கள் சசிகலா வட்டாரத்தில். எனவே அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் சசிகலாவின் முடிவு எந்த நேரத்திலும் மாறலாம் என்பதே சசிகலா ஆதரவாளர்களின் நம்பிக்கை..

Related posts

Leave a Comment