மக்களை குழப்பும்- முதல்வர் பழனிச்சாமி-ஸ்டாலின் குற்றசாட்டு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் 27) கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

நாகர்கோவில் செட்டிக்குளத்தில் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அவர், “நடக்க இருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற வேட்பாளர்கள் நாகர்கோவில் எம்.ஆர்.காந்தி, குளச்சல் குமரி பா.ரமேஷ், கன்னியாகுமரி வேட்பாளர் தளவாய் சுந்தரம், பத்மநாபபுரம் ஜான் தங்கம், விளவங்கோடு பாஜக வேட்பாளர் ஜெயசீலன், கிள்ளியூர் ஜூட் தேவ் ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்.

பொன்.ராதாகிருஷ்ணன் திறமையானவர். இந்த மாவட்டம் எழுச்சி பெற, ஏற்றம் பெற மத்திய அரசிடம் பேசி பல திட்டங்கள் பெற்றுத் தந்திருக்கிறார். மாவட்டம் வளர்ச்சிபெற அவருக்கு வாக்களியுங்கள்.

கடந்த தேர்தல்களில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாததால் பல திட்டங்கள் வராமல் போனது. இங்கு நம் கூட்டணி பிரதிநிதி இல்லாததால் இந்தப் பகுதி மக்கள் பிரச்சினைகள் எங்களிடம் கொண்டு வரப்படவில்லை. இங்குள்ள திட்டம் நிறைவேற மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் பிரதிநிதியை வெற்றி பெறவையுங்கள். மத்தியிலும் மாநிலத்திலும் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்தால் எப்படி வளர்ச்சி நடக்கும். எப்படி நீங்கள் வைக்கும் கோரிக்கை நிறைவேறும்.

எதிர்க்கட்சியினர் தவறான, அவதூறான செய்திகளைப் பரப்புகிறார்கள். கன்னியாகுமரியில் சரக்குப் பெட்டகத் துறைமுகம் வருவதாக அவதூறு செய்தி தேர்தல் காரணமாகப் பரப்பப்படுகிறது. சரிக்குப்பெட்டகத் துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது. மீண்டும் சொல்கிறேன். மக்கள் எதிர்க்கட்சிகள் சொல்வதை நம்ப வேண்டாம். தேர்தல் நேரத்தில் திமுக – காங்கிரஸ் சேர்ந்து மீனவர்களின் ஓட்டுக்காக இதைப் பரப்புகிறார்கள்.

நான் கடினப்பட்டுதான் பேசுகிறேன். எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் என்பதால் பேசி பேசி தொண்டை கட்டிவிட்டது. எங்கு பார்த்தாலும் பொய்தான். பொய்யை மூலதனமாகக் கொண்டு அரசியல் நடத்தும் கட்சி திமுக – காங்கிரஸ் கட்சிகள்தான்.

நாகர்கோவில் நகராட்சி மக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி ஆக்கினோம். எங்களுக்கு எம்.எல்.ஏ. முக்கியம் அல்ல. மக்கள்தான் முக்கியம். நாகர்கோவிலை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தியது ஜெயலலிதா அரசு. நல்ல சாலை, குடிநீர் வசதிகளைக் கொண்டுவருகிறோம். தேர்தல் சமயத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் சமயத்தில் சொன்ன மிக்‌ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கினோம்.

இன்று தமிழகம் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற நிலையை அடைந்துள்ளது. விவசாயம், மீன்பிடி தொழிலுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவந்துள்ளோம். மீனவர்களின் பழுதடைந்த வீடுகளுக்குப் பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். மானியத்தோடு, வரி விலக்கோடு விசைப் படகுகளுக்கு வழங்கும் ரூ.18,000 லிட்டர் டீசல், இனி ரூ.20,000 லிட்டராக வழங்கப்படும்.

மண்ணெண்ணெய் மானியம் ரூ.3,400இல் இருந்து ரூ.4,500 ஆக உயர்த்தப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,000 கொடுப்பதை, ரூ.7,500 ஆக வழங்கப்படும். மீனவர்கள் பல்வேறு பிரச்சினையால் கடன் பெறுகிறார்கள்.

மீனவர்களுக்கென்று மீன்வள வங்கி ஏற்படுத்தப்படும். மீனவர்களுக்கென்று தனி வங்கி ஏற்படுத்தப்படும். அதன் மூலம் அவர்கள் கடன் பெற்று மேம்பாடு அடையலாம். மீனவர்கள் விபத்தில் இறந்தால் அவர்களுக்கு நிவாரணமாக ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டதை, ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

உள்நாட்டு மீனவர்களுக்காக விரிவான திட்டங்கள் கொண்டுவரப்படும். கன்னியாகுமரி சுற்றுலா மாவட்டம். கன்னியாகுமரியில் சுற்றுலாவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். திருவள்ளுவர் சிலைக்கு, விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே ரூ. 20 கோடியில் பாலம் அமைத்து சுற்றுலா பயணிகள் வசதிக்குத் திட்டம் நிறைவேற்றப்படும்.

கன்னியாகுமரியில் கூடுதல் படகு நிறுத்துத்தளம் அமைக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் மட்டும் நிறைய திட்டங்கள் அறிவித்திருக்கிறோம்” என வாக்குறுதிகளை எடுத்துக்கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பின்னர், ”மக்களை குழப்பி ஸ்டாலின் ஆட்சிக்கு வர துடிக்கிறார், அதிமுக எதுவுமே செய்யவில்லை என கூறும் ஸ்டாலின் என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?” என நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இன்ப துரையை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டபோது இக்கேள்வியை எழுப்பினார்.

முதல்வருக்கு எதிராக கறுப்புக்கொடி

வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாகத் தென்மாவட்டங்களில் சீர்மரபினர் சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நான்குநேரிக்கு தமிழக முதல்வர் பிரச்சாரம் செய்ய வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீர்மரபினர் நல அமைப்பை சேர்ந்தவர்கள் கறுப்புக்கொடி காட்ட வருவதாக நான்குநேரி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் போலீஸார் நான்குநேரி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் வந்த சீர்மரபினர் நல அமைப்பின் மாநிலப் பொருளாளர் தேவமணி அம்மாள் தலைமையில் நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சியின் அமைப்பு செயலாளர் துர்க்கை லிங்கம் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.

Related posts

Leave a Comment