கொளத்தூர் மாடல் தொகுதியாக மாற்றப்படும் – மு.க.ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று (மார்ச் 27) கொளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், இந்தத் தொகுதியை மாடல் தொகுதியாக மாற்றுவேன் என்று கூறியுள்ளார்.

ஸ்டாலின் பேசுகையில், “சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இந்தக் கொளத்தூர் தொகுதியில் வழக்கம்போல் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறேன். இது கொளத்தூர் தொகுதி என்று சொல்வதைவிட நம்முடைய தொகுதி என்றே சொல்வேன்.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பதால், கொளத்தூர் தொகுதிக்குக் காலம் தாழ்ந்து வந்திருக்கிறேன்.  இருந்தாலும், நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள். அதனால்தான் முதலில் சொன்னேன்,  இது நம்முடைய தொகுதி என்று.

“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் வீட்டுப் பிள்ளை தானே வளரும்” என்று பழமொழி உண்டு. அதேபோல மற்ற தொகுதிகளுக்குச் சென்று வருவதால், இந்தத் தொகுதியில் எனக்கு மேலும் ஆதரவு அதிகமாகத்தான் இருக்கும்.

‘நம்முடைய எம்.எல்.ஏ. – நம் வீட்டுப் பிள்ளை – ஊர் ஊராகப் பரப்புரைப் பயணத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார். அதனால் நம்முடைய தொகுதியைப் பற்றிக் கவலை இல்லை. இருந்தாலும், ஒரு சிலருக்குக் கோபம் வந்துவிடும். அதனால் தான் தற்போது வந்திருக்கிறேன்” என மக்களிடம் பேசிய ஸ்டாலின், 234 தொகுதிகளில், கொளத்தூர் தொகுதியை, ஒரு மாடல் தொகுதியாக மாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

மேலும், ஒரு எதிர்க்கட்சி தலைவராக எப்படி பணியாற்றினேனோ,  அதைவிட 10 மடங்கு இன்னும் அதிகமாக ஆளும்கட்சியாக, முதலமைச்சராக இன்னும் பல மடங்கு சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்றார்.

தொடர்ந்து சைதாப்பேட்டை, வேளச்சேரி, விருகம்பாக்கம் தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது, “கழகத்தின் கோட்டை இந்த சைதாப்பேட்டை.  கலைஞரின் தொகுதி இந்த சைதாப்பேட்டை. 1967இல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, கலைஞர் இந்த  தொகுதியிலிருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட்டார்”  என்று கூறினார்

திமுக வேட்பாளர் மா.சுப்ரமணியம், விருகம்பாக்கம் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா, வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மெளலானா ஆகியோருக்கு ஆதரவாக வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்ட ஸ்டாலின்,  “10 ஆண்டுக்காலம் நாம் ஆட்சியில் இல்லை.  இருந்தாலும் திமுக ஊழல் ஆட்சி” என்று முதல்வர் கூறி வருகிறார்.  ஆனால் எங்கு  பார்த்தாலும்  ஊழல் செய்து கொண்டிருப்பது அவர்கள்தான். முதல்வர் முதல் அமைச்சர்கள் வரைக்கும் ஊழல் செய்திருக்கின்றனர்.

இந்த அமைச்சரவையில் தங்கமணி, வேலுமணி என இரண்டு மணிகள் இருக்கிறது. இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், வேலுமணி வெளிப்படையாக லஞ்சம் வாங்குவார். தங்கமணி ரகசியமாக வாங்குவார். அதுதான் வித்தியாசம். வேலுமணி மீது எல்இடி பல்பு தொடங்கி ஸ்மார்ட்சிட்டி வரைக்கும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. தங்கமணி மீது காற்றாலை ஊழல், மின்கொள்முதல் ஊழல், உதிரிபாகங்கள் கொள்முதல் செய்வதில் ஊழல் என  அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டார் ஸ்டாலின்.

Related posts

Leave a Comment