மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரச்சாரம் செய்யத் தேர்தல்ஆணையம்தடைவிதித்துள்ளது.
இதனிடையே கடந்த ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடந்த பிரச்சாரத்தின்போது முதல்வர் மம்தா பானர்ஜி விதிகளை மீறி பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மத்திய பாதுகாப்பு படையினருக்கு எதிராக மக்களைப் போராடத் தூண்டியதாகவும், முஸ்லிம் வாக்குகள் குறித்து விமர்சித்ததாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.தேர்தல் ஆணையத்தில் பாஜக தரப்பினர் புகார் அளித்திருந்த நிலையில், இதற்கு மம்தா அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தச் சூழலில் மம்தா அளித்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று கூறி அவர் 24 மணி நேரம் பிரச்சாரம் செய்யத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.அதன்படி நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை மம்தா பானர்ஜி பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனக் கூறியுள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.ஒரு மாநில முதல்வருக்கே பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பது, அரசியல் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.