காவல்துறை மரியாதையுடன் காற்றில் கரைந்தார் நடிகர் விவேக்

நடிகர் விவேக் சமூக அக்கறையுள்ள கலைஞர். மக்கள் மீதான அக்கறை, சுற்றுச் சூழல், மரம் நடுதல் ஆகியனவற்றில் அவரது பங்களிப்பு வரவேற்கத்தக்கது. அவரது கடைசி நிகழ்ச்சி கொரோனா பரவலைத்தடுக்க மக்கள் தடுப்பூசி போடவேண்டும் என்பதற்காக, தானே தடுப்பூசி போட்டு வேண்டுகோள் விட்டார்.

அவரது கடைசி நிகழ்ச்சியாக அது அமைந்தது, அதன் பின்னர் நேற்று காலை வீட்டிலிருந்த அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். உடனடியாக அவருக்கு உயரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு எக்மோ கருவி மூலம் இதயத் துடிப்பு இயங்க வைக்கப்பட்டது. காலையில் மீண்டும் ஏற்பட்ட மாரடைப்பு அவர் உயிரைப் பறித்தது.

அவரது மறைவு செய்தி கேட்டு திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. திரையுலகினர், இரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
அப்துல் கலாமின் பெயரால் ஒரு கோடி மரம் நடும் இயக்கத்தைத் தொடங்கினார். இதுவரை 33.5 இலட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளார். கிராமம்தோறும் இளைஞர் குழுக்களை உருவாக்கியுள்ளார்.
நடிகர் விவேக்கின் மரணத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். அவரது சமூக அக்கறை, கலைச் சேவைக்காக அவரது உடலுக்கு காவல்துறை மரியாதை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

மாலை 5 மணிக்கு மேட்டுக்குப்பம் மயானத்தில் இறுதிச்சடங்கு நடந்தது. இதற்காக அவரது உடல் வீட்டிலிருந்து வேனில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக மேட்டுக்குப்பம் மயானம் நோக்கிச் சென்றது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இறுதி ஊர்வலம் 2 மணி நேரத்திற்கும் மேலாகச் சென்று மேட்டுக்குப்பம் மயானத்தை அடைந்தது. அங்கு அவருக்கு (Guard of Honour) எனப்படும் ஆயுதமேந்திய காவல் மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இறந்து போனவர் நம் சமூகத்திற்கு எந்த அளவுக்குப் பங்காற்றி இருக்கிறார் என்பதை அடிப்படையாக வைத்து மாநில அரசின் ஒப்புதலுடன் அரசு மரியாதை உறுதி செய்யப்படும். அதில் இரண்டு வகை உண்டு முழு அரசு மரியாதை, காவல்துறை மரியாதை என இருவகை உண்டு.

அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், சட்டம் என இதில் ஏதாவதொரு துறையில் மிகப்பெரிய பங்களிப்பையும், சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தவர் இறந்து போனார் என்றால் அவருக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய அரசு முடிவெடுக்கும். தற்போது விவேக்குக்குக் காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது.அவரது உடல் மயானத்துக்குக் கொண்டு வரப்பட்டவுடன் அதற்கான சடங்குகள் முடிந்தது. பின்னர் ஓர் ஆய்வாளர் தலைமையில் ஒரு தலைமைக்காவலர், 3 பிகிலர், 12 பேராக இரண்டு வரிசைகளில் காவல்துறையினர் நின்று துப்பாக்கிகளை தரையில் தாழ்த்தி கார்டு ஆஃப் ஹானர் மரியாதை செலுத்தினர். தலை கவிழ்ந்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ஆய்வாளர் ஆணைக்கிணங்க காவலர்கள் தங்கள் இடுப்பிலிருந்த குண்டுகளை துப்பாக்கியில் நிரப்பினர். பின்னர் துப்பாக்கிகள் வானை நோக்கி மூன்று முறை என 72 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பிகிலர்கள் இசையுடன் காவல்துறையினர் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.அதன் பின்னர் காவல்துறையினர் இடத்தை விட்டு அகன்றனர். அதன் பின் குடும்பத்தினர், அவர்கள் சடங்குகளைச் செய்தனர். விவேக்கின் மூத்த மகள் அவரது உடலுக்கான இறுதிச் சடங்குகளை செய்தார், பின்னர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது.
இலட்சக்கணக்கானோரின் கண்கள் கண்ணீரை உகுக்க காற்றில் கரைந்தார் அக்கலைஞர்.

Related posts

Leave a Comment