நடிகர் R.K.சுரேஷ் மீது ஒரு கோடி ரூபாய் மோசடிக்குற்றசாட்டு

சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவி வீணா(45) என்பவர்  நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர், பாஜக நிர்வாகி என பன்முக தன்மை கொண்ட ஆர்.கே.சுரேஷ் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.

அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது….

என் கணவர் ராமமூர்த்தி எஸ்பிடி என்ற பெயரில் எர்த்மூவர்ஸ் நடத்தி வந்தார். தொழிலில் எற்பட்ட இழப்பைச் சரி செய்ய 2018 ஆம் ஆண்டு 10 கோடி கடன் வாங்கித் தருவதாக சென்னையில் உள்ள கமலகண்ணன் கூறினார். அதன் பேரில் திரைப்பட நடிகரான ஆர்.கே. சுரேஷை, கமலகண்ணன் எனக்கும் என் கணவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது ஆர்.கே.சுரேஷ் தனக்குத் தெரிந்த வங்கி மேலாளர் மூலமாக கடன் எற்பாடு செய்து தருவதாகவும் அதற்கு கமிஷனாக 1 கோடி கொடுக்கும்படியும் கூறினர். அவரை நம்பி எனது கணவர் 1 கோடி எற்பாடு செய்து ஆர்.கே.சுரேஷ் வங்கிக் கணக்கில் 93 இலட்சமும், நேரடியாக 7 இலட்சம் பணமாகவும் கொடுத்தோம்.

அதன் பிறகு என்னையும் என் கணவரையும் வளசரவாக்கத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ஆர்.கே.சுரேஷ் மற்றும் கமலகண்ணன் ஆகியோர் அழைத்துச் சென்றனர். அங்கு வங்கி மேலாளர் முன்னிலையில் என்னிடமும் என் கணவரிடமும் பல ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர். பிறகு விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்தும் பல ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர். மேலும் நிரப்பப்படாத காசோலைகளிலும் என்னிடமும் என் கணவரிடமும் ஆர்.கே.சுரேஷ் கையெழுத்து வாங்கிவைத்துக் கொண்டார், வங்கி மேலாளர் சக்திவேல் 10 கோடி ருபாய் கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரும் எனக் கூறி என்னையும் என் கணவரையும் அனுப்பிவிட்டார். ஆனால் அவர்கள் சொன்னபடி 10 கோடி பணம் எங்கள் வங்கிக் கணக்கிற்கு வரவில்லை.

இது குறித்து ஆர்.கே.சுரேசை அணுகிய போது அவர் மிரட்டும் தொனியில் பணம் தரமுடியாது உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள் என்று கூறினார். அப்போது தான் எனது கணவருக்கும் எனக்கும் எங்களை ஆர்.கே.சுரேஷ் ஏமாற்றியது தெரியவந்தது.

மேலும், ஆர்.கே.சுரேஷ் மற்றும் கமலகண்ணன் ஆகியோர் கடன் வாங்கித் தருவதாக 1 கோடி பெற்றுக்கொண்டு ஆர்.கே.சுரேஷ் தனது வீட்டை எங்கள் பெயருக்கு ஒரு விற்பனைப் பத்திரம் பதிவு செய்து அதை வங்கியில் வைத்துப் பணத்தைப் பெற்றுக்கொண்டு எங்களை ஏமாற்றியது தெரியவந்தது. இதனால் மன உளைச்சல் எற்பட்டு என் கணவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

அதன்பின், எங்களுக்குத் தரவேண்டிய 1 கோடி பணத்தைக் கேட்டு பலமுறை ஆர்.கே.சுரேசை அணுகியபோது அவர் என்னையும் என் மகன்களையும் கொலை செய்து விடுவதாக விழுப்புரத்தில் உள்ள அவரது அடியாட்களை வைத்து மிரட்டிவந்தார்.

மேலும் எங்களை இந்த பிரச்னையில் இருந்து காப்பாற்றுவதாகக் கூறி சென்னையில் உள்ள ஒரு நிழல் உலக தாதா தொடர்பு கொண்டு எங்களுக்கு உதவி செய்வதாகக் கூறி நிரப்பப்படாத பத்திரத்தில் கையெழுத்துப் பெற்றுக் கொண்டார். ஆனால் அவரும் ஆர்.கே.சுரேசின் கூட்டாளிகள் என்று தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து 1 கோடி பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment