“வனவாசம் முடிந்து வந்துள்ள ‘சாமானியன்’ ராமராஜனுக்கு இனி பட்டாபிஷேகம் தான்” ; இயக்குநர் பேரரசு

நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு ‘மக்கள் நாயகன்’ ராமராஜன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். அதுமட்டுமல்ல. ராமராஜனின் திரையுலக பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்த இசைஞானி இளையராஜா, தற்போது 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கைகோர்த்துள்ளார்

தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் R.ராகேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு கதாசிரியர் கார்த்திக் குமார் கதை எழுதியுள்ளார். கதாநாயகிகளாக நக்ஸா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி நடிகின்றனர். முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், லியோ சிவகுமார், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி, போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.. ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை ராம்கோபி கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைத்திருக்கிறார்.

படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ‘சாமானியன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாயகன் ராமராஜன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே.எஸ் ரவிக்குமார், ஆர்வி உதயகுமார், பேரரசு, சரவண சுப்பையா, ரோபோ சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் பேசும்போது, “ரஜினி சாரே ஒருமுறை என்னிடம் ராமராஜன் பற்றி குறிப்பிடும்போது, அவருக்கு இருக்கும் அந்த மாஸ் ஓப்பனிங் கலெக்சனை பார்த்து, நமக்கு போட்டியாக முன்னாடி போய்க் கொண்டிருக்கிறார் என பயந்துவிட்டேன் என்று கூறினார். நான் பல வருடங்களாக உதவி இயக்குநராக பணியாற்றிய சமயத்தில் அந்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறாத நிலையை நான் பணியாற்றிய முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றால் அது ராமராஜன் நடித்த ‘ராஜா ராஜா தான்’ நான் அதற்கு முன் பல படங்கள் பணியாற்றி இருந்தாலும் முதன்முதலில் ஸ்டார்ட் கட் ஆக்சன் சொன்னது ராமராஜனுக்கு தான். ராஜ்கிரண் தயாரிப்பில், கஸ்தூரிராஜா கதை, வசனம் எழுதிய ‘பெத்தவ மனசு’ படத்தில் நான் இணை இயக்குனராக பணியாற்றினேன். அந்த படத்தில் ராமராஜன் ஹீரோ மற்றும் டைரக்டராக இருந்ததால் அவர் நடிக்கும் காட்சிகளை நான் தான் அவருக்கு ஸ்டார்ட் ஆக்சன் சொல்லி இயக்கினேன். அதுதான் என்னுடைய பிள்ளையார் சுழி. அதன்பிறகு ராஜ்கிரன் ஹீரோவாகிவிட்டார். கஸ்தூரிராஜா இயக்குநராகிவிட்டார். நானும் புரியாத புதிர் மூலமாக இயக்குநர் ஆகிவிட்டேன். 1981 லிருந்து 9 வருடங்கள் வரை ராசி இல்லாத சூழல் இருந்த நிலையில் ராசியான மனிதரான ராமராஜன் மூலமாக எனக்கு எல்லாமே சென்டிமென்ட் ஆக மாறியது. இதுதான் எனக்கும் அவருக்குமான பந்தம்.

இந்த படத்தில் நடிக்க இயக்குநர் ராகேஷ் வந்து அழைத்தபோது ராமராஜன் இருக்கிறார் என்றால் நான் ஒரு நாள் வந்து போகும் கெஸ்ட் ரோலில் கூட நடிக்க தயார் என்று கூறி விட்டேன். அவர் ஏன் இப்படி நடக்கிறார், இருக்கிறார் என்று யாரும் அவரை தவறாக நினைக்காதீர்கள். அந்த விபத்திற்கு பிறகு தான் அவருக்கு இப்படி ஆகிவிட்டது. அவர் இப்போது நம்முடன் இருக்கிறாரே என்றால் அது அந்த ஆண்டவனின் அருள் தான். அவருடன் காரில் சென்றவர்கள் எல்லாம் விபத்தில் இறந்துவிட கடவுள் அருளால் உயிர் பிழைத்த அவர். இன்று மீண்டு வந்து மீண்டும் கதாநாயகனாக இளையராஜாவின் இசையில் பாடுகிறார் என்றால் அதுதான் இறைவனின் அருள்.

இந்த நிகழ்விற்கு இளையராஜா வரவில்லை.. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர் வீட்டிலும் சில நாட்களுக்கு முன் சோக நிகழ்வு நடந்தது. பரவாயில்லை… ராமராஜனின் அடுத்த படத்திற்கும் அவர்தான் இசையமைக்கிறார் என்பதால் அப்போது பார்த்துக் கொள்வோம். இளையராஜாவுடன் நான் அவ்வளவு நெருங்கி பழகியது இல்லை என்றாலும் நான் ‘ராஜா ராஜா தான்’ படத்தில் பணியாற்றிய போது அந்த படத்திற்கு இசையமைத்தது இளையராஜா தான். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து ஏவிஎம் தயாரிப்பில் சக்திவேல் என்கிற படத்தை இயக்கியபோது அதற்கு இளையராஜா தான் இசை அமைத்தார். அப்போது ஒரு பாடல் இதுபோல வேண்டும் என நான் உதாரணமாக சொல்லும் போது என்னுடைய முந்தைய படமான புருஷ லட்சணம் படத்தில் இருந்து கோலவிழியம்மா என்கிற சாமி பாடலை பாடிக் காட்டினேன்.

அதன் பிறகு வெளியே வந்ததும் ஏவிஎம் சரவணன் என்னை அழைத்து அது தேவா சார் பாட்டு. அதை ஏன் இளையராஜாவிடம் சொன்னாய், இருவரும் போட்டியாளர்களாச்சே என்று என்னை செல்லமாக கடிந்து கொண்டார். அதன் பிறகு மதியம் அதேபோன்று இன்னொரு பாடலுக்காக அமர்ந்த போது இதற்கு என்ன பாடல் இன்ஸ்பிரேஷனாக சொல்லப் போகிறாய் என்று ராஜா சார் கேட்டார். உடனே சுதாரித்துக் கொண்டேன். அப்போது எனக்கு ராமராஜன் சார் தான் ஞாபகம் வந்தது. உடனே மாங்குயிலே பூங்குயிலே போல ஒரு பாடல் வேண்டுமென கேட்டேன். அப்படித்தான் ‘மல்லிகை மொட்டு மனச தொட்டு’ என்று ஒரு பாடலை போட்டு தந்தார். அந்த பாடல் அப்போது மிகப்பெரிய ஹிட் ஆகி இப்போது வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. என்னுடைய வாழ்க்கையில் அந்தந்த சமயங்களில் நடக்கும் சம்பவங்களில் எல்லாமே ஒருவர் உள்ளே வருவார்.. அவர் தான் ராமர்.. ராமராஜன்” என்றார்.

நடிகை வினோதினி பேசும்போது, “11 வருடங்களுக்கு பிறகு ராமராஜன் மீண்டும் திரையில் தோன்றப் போகும் இந்த படத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது. பூந்தமல்லி அருகில் அபார்ட்மெண்ட் ஒன்றில் படப்பிடிப்பை நடத்திய போது எதிர்பாராத விதமாக அங்கே படப்பிடிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டதும் உடனடியாக அதற்கு மாற்றாக அதே போன்று ஒரு இடத்தை வளசரவாக்கத்தில் ஏற்பாடு செய்து இரவு பகலாக 72 மணி நேரம் தூங்காமல் பணியாற்றி காட்சிகளை படமாக்கினார் இயக்குநர் ராகேஷ். அவர் ஒரு தயாரிப்பாளருக்கான இயக்குனர்” என்று கூறினார்

நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது, “ஒரு விருது வழங்கும் விழாவில் நானும் ராமராஜன் அண்ணனும் ஒன்றாக கலந்து கொண்டோம். எனக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டிருந்தது யார் வழங்கப் போகிறார்கள் என்று எனக்கு தெரியாத நிலையில் அவர் கையாலேயே அந்த விருதை பெற்றேன். அன்று அவர் கலர் கலராக உடை அணிந்ததை கிண்டல் பண்ணி பேசினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை இளைஞர்கள் அந்த உடையை தான் ட்ரெண்டிங்காக அணிந்து வருகிறார்கள்” என்று பேசினார்.

நடிகை நக்ஸா சரண் பேசும்போது, “என்னுடைய வாழ்க்கையில் நான் நடித்த முதல் படம் ‘சாமானியன்’. இந்த படத்தில் ராமராஜனின் மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய சந்தோசம். எம் எஸ் பாஸ்ர், ராதாரவி படம் முழுக்க எனக்கு வழிகாட்டியாக இருந்து நடத்தினார்கள். அவர்களுக்கு நன்றி.. இளையராஜா சாரின் பெயரை கேட்டாலே ஒரு பாசிட்டிவான அதிர்வு ஏற்படும். அவருடைய இசையில் நான் என்னுடைய முதல் படத்தில் நடித்ததை ஆசிர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன். முதல் படத்தில் மிகவும் அழுத்தமான, ஆழமாக கதாபாத்திரம் கொடுத்ததற்காக இயக்குநர் ராகேஷ் மற்றும் தயாரிப்பாளர் மதியழகன் அவர்களுக்கு என்னுடைய நன்றி” என்று பேசினார்.

இயக்குநர் சரவண சுப்பையா பேசும்போது, “தயாரிப்பாளர் மதியழகன் இன்னும் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தரும் பட்சத்தில் ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளராக தொடர்ந்து பயணிப்பார். அதேபோல இயக்குநர் ராகேஷ் திறமையான ஒரு டெக்னீசியன். அவர் இந்த படத்தை எடுத்துக் கொண்ட விதம் ரொம்பவே புதிதாக இருந்தது. இசைஞானி இளையராஜாவின் இசையில் எனக்கு இது நான்காவது படம். ஒரு மேஜிக்கல் அசைவு இல்லாமல் எந்த படமும் என் நடக்காது. 25 வருடங்களுக்குப் பிறகு இசைஞானியும் மக்கள் நாயகனும் ஒன்றாக இணைந்தது, 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ராமராஜன் திரையில் தோன்றுவதற்கு காரணம், 7 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் ராகேஷ் மீண்டும் இந்த படத்தை இயக்க காரணம் படத்தின் ஸ்கிரிப்ட் தான். ராகேஷ் என்னிடம் பேசும்போது, சிட்டிசனாகிய நீங்கள் இந்த சாமானியனை வாழ்த்த வேண்டும் என்றார். சாமானியனே ஒரு சிட்டிசன் தானே.. இந்த படத்தில் ராமராஜனுக்கு வழக்கமான கிராமத்து பெயராக இல்லாமல் சங்கர் நாராயணன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கதாசிரியர் கார்த்திக் குமார் தன் தாத்தா பெயரை மனதில் வைத்து எழுதியதாக கூறினாலும் இயக்குனர் ராகேஷ் அதை படத்தில் வைத்திருப்பதற்காந காரணத்தை நீங்கள் படத்தில் பார்க்கும்போது செமையாக இருக்கும்” என்று கூறினார்.

 

இயக்குனர் பேரரசு பேசும்போது, “ராமராஜன் வனவாசம் முடிந்து வந்துள்ளதாக எல்லோரும் சொன்னார்கள் வனவாசம் முடிந்ததும் பட்டாபிஷேகம் தான். சாமானியன் ஒரு பட்டாபிஷேகத்திற்கு தயாராகி விட்டார். நதியா வளையல், குஷ்பூ இட்லி என நடிகைகளை மட்டுமே புகழ்ந்த ரசிகர்கள் மத்தியில் ராமராஜன் சட்டை என ஒரு நடிகரையும் புகழ வைத்தது ராமராஜன் தான். எனக்கும் அவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. எனக்கும் அவருக்கும் குருநாதர், தாய் வீடு எல்லாமே இயக்குநர் ராம நாராயணனும் தேனாண்டாள் பிலிம்ஸும் தான். அவருக்கு எப்படி ஊர் ராசியோ எனக்கும் அதே போல ஊர் ராசி தான்.. இப்போதெல்லாம் இரண்டு படங்கள் ஓடி விட்டாலே புது கம்பெனிகளுக்கு மட்டுமல்ல, தமிழ் கம்பெனிகளுக்கே கால்சீட் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். ஆனால் ராமராஜன் பெரிய நடிகராக மாறினாலும் சிறிய தயாரிப்பாளர்கள், தன்னிடம் உதவியாளராக பணியாற்றிய இயக்குனர்கள் ஆகியோருக்கு தான் முன்னுரிமை கொடுத்தார். அப்படி ஒரு மனசு அவருக்கு மட்டும் தான் உண்டு. ராமராஜன் ஓடுகிற குதிரையில் ஏறுகிறவர் அல்ல.. பல குதிரைகளை ஓட வைத்தவர்.. தனக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து மீண்டு இந்த அளவிற்கு வந்து உட்கார்ந்து இருக்கிறார் என்றால் அவருடைய மனதும் அவருடைய ரசிகர்களும் தான் காரணம்.. தமிழ் திரையுலகில் ராமராஜனின் அடையாளம் கல்வெட்டு மாதிரி இருக்கும். அது என்றும் மறையாது” என்று பேசினார்.

Related posts

Leave a Comment