சிம்மசொப்பனம்செந்தில்பாலாஜி மீது குற்றப்பத்திரிகை

கரூரில் நேற்று (மார்ச் 26) திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரம்மாண்டக் கூட்டத்தின் இடையே பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “செந்தில்பாலாஜி ஆளுங்கட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்”என்று பேசியிருந்ந்தார்.

அன்றே வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய திமுக கரூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான செந்தில்பாலாஜி மீது குற்றப் பத்திரிகை நேற்று (மார்ச் 27) பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய குற்றப் பிரிவு தாக்கல் செய்துள்ள இந்த குற்றப் பத்திரிகையில் அப்போதைய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு பேர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

மத்திய குற்றப் பிரிவின் வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவிடம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 2011- 2015 அதிமுக ஆட்சி காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை பெற்றுத் தருவதில் அதிகாரிகளுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

மத்திய குற்றப் பிரிவின் இறுதி விசாரணை அறிக்கையில், “போக்குவரத்துக் கழக மேலாளர்களின் துணையோடு விண்ணப்பதாரர்களின் முழு விவரங்களையும் சேகரித்து, யார் யாருக்கு பணி வழங்க வேண்டும் என்ற புதிய பட்டியலை அந்தந்த நிர்வாக இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ளார். ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பியதில் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளைப் பின்பற்றாமல் இந்தப் பட்டியல் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டுள்ளது”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ். தேவசகாயம் என்பவர் 2015 ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தன் மகனுக்கு கண்டக்டர் வேலைக்காக 2.6 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து ஏமாந்ததாக அவர் தன் புகாரில் கூறியிருந்தார்.

Related posts

Leave a Comment