கதை எழுதியதும் – தயாரிப்பாளரான அனுபவமும்-ஏ. ஆர்.ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், முதன்முறையாக கதை எழுதி தயாரித்திருக்கும் படம் “99 சாங்ஸ்”.இப்படம் ஏப்ரல் 16 இல் தமிழ் தெலுங்கு இந்தி உட்பட பல மொழிகளில் உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்துக்கான கதை எழுதியது எப்படி? தயாரிப்பாளரானது எப்படி? என்பவை உட்பட படத்தைப் பற்றிய பல அனுபங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

1. 99 சாங்ஸ் படம் பற்றி…?

பழைய மற்றும் புதிய உலகங்களுடனான ஒரு மனிதனின் போராட்டமே 99 சாங்ஸ்-ன் மையக்கருவாகும். அதற்கான மாற்று மருந்தாக இசை அமைகிறது. இத்திரைப்படத்தின் இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திறமைமிக்க நடிகர்களான ஏஹன் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்துவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். மனிஷா கொய்ராலா மற்றும் லிசா ரே போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் ரஞ்சித் பாரோட் மற்றும் ராகுல் ராம் போன்ற இசை மேதைகளுடன் இணைந்து பணிபுரிந்தது, சிறந்த அனுபவமாக இருந்தது.

2. 99 சாங்ஸ் படக்கதையின் தொடக்கப் புள்ளி என்ன?

2010 ஆம் ஆண்டு எனக்கு கஷ்டமான காலம். அப்போது நிறைய விசயங்கள் நடந்தன. அவற்றை முடித்து டிசம்பரில் விமானத்தில் வந்தபோது தேவதை கதை மாதிரி ஒரு யோசனை வந்தது. ஒரு பையன், ஒரு பெண்ணை அடைவதற்கு 100 பாட்டுகள் எழுதினால் எப்படியிருக்கும் – இந்தக் கருவிலிருந்து நிறைய ஆய்வுகள் மேற்கொண்டு இந்தக் கதையை உருவாக்கினேன். இந்தப் படத்தை இயக்குவதற்கு விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி கிடைத்தார். இதற்கு நிதியளிக்க ஐடியல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் கிடைத்தது. அதன்பின் ஒவ்வொரு கூட்டாளியாகக் கண்டுபிடித்துத்தான் இந்த படம் உருவானது.

3.முழுக்க இசைப் பின்னணி கொண்டது என்பதால் எளிதாக எழுதிவிட்டீர்களா?

எதுவும் எளிதாக வராது. எளிதாக இருந்தால் அலுப்பு தட்டிவிடும். வாழ்க்கை, அனுபவ அறிவு, இசையின் பல கோணங்கள் ஆகியவற்றைச் சேர்த்து எழுதினேன். சினிமாத்துறையில் மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில் இசை சற்று எளிதானது. வெளியே செல்லத் தேவையில்லை. ஆனால் இந்தப் படப்பிடிப்புக்காக, நான் வெளியே செல்லும்போது பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. வழக்கமாக, நான் அதிகம் பேசமாட்டேன். ஆனால், தற்போது படப்பிடிப்பில் பலர் முன்னிலையில் நாம் சொல்ல வரும் கருத்தை எப்படித் தெளிவாகத் தெரிவிப்பது என்பது எல்லாம் பழகிவிட்டது. அந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்.

4.கதை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். திரைக்கதை அமைப்பை ஏன் நீங்களே உருவாக்கவில்லை?

திரைக்கதையில் நிறைய விசயங்கள் உள்ளன. திரைப்படத் தயாரிப்பு என்பது வெறும் கதை மட்டும் அல்ல. அதில் சினிமா சம்பந்தப்பட்ட பல விசயங்கள் உள்ளன. இசை, காட்சிகள், சவுண்ட் டிசைன் ஆகியவை சேர்ந்த ஒரு மேஜிக் தான் சினிமா. அது டைரக்டராக இருந்த அனுபவம் உள்ளவர்களுக்குத்தான் வரும். விஸ்வேஷ் நிறைய விளம்பரப் படங்கள் பண்ணியிருக்கிறார். இசை ஆவணப் படங்கள் தயாரித்திருக்கிறார். இருவரும் அமர்ந்து, சிந்திந்து உருவாக்கிய திரைப்படம்தான் இது.

5. தயாரிப்பாளராக உருவெடுத்தது ஏன்?

ஒரு இசையமைப்பாளராக இருந்து விட்டு, திடீரென வேறு வேலை பண்ணும்போது, அத்துறையைச் சார்ந்த பிரபலத்திடம் சென்று நமது யோசனையைத் தெரிவித்தால், அவர்கள் ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். அதனால் புது நபர்களை வைத்து இந்தப் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தேன். அனுபவம் வாய்ந்த இயக்குநரிடம் சென்றால், அவர்கள் தங்கள் அனுபவ அறிவைத் தருவார்கள். ஆனால் அதைவிட எனக்கு சுதந்திரம் முக்கியம். சின்னச் சின்ன விசயங்கள் தவறாகப் போனாலும், சரி செய்து கொள்ளலாம். கற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் வெற்றியும் பெற வேண்டும். அந்த சமநிலை இந்தக் குழுவால் கிடைத்தது.

6. கதை எழுதும் போது நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

முதல் முறையாகக் கதை எழுதும் போது, நமக்குத் தெரிந்த விசயங்கள் அனைத்தையும் தெரிவிக்க வேண்டும் என முயற்சி செய்வோம். 300 சதவீதம் கதை எழுதி அதை 100 சதவீதமாக வடிகட்டி, அதை எப்படிக் கொடுக்க முடியும் என்பதை நான் இந்தப் படத்தில் கற்றுக் கொண்டேன்.

7. பல்வேறு முன்னணி இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளீர்கள். அவர்களை வைத்து ஏன் இந்தப் படத்தை உருவாக்கவில்லை?

நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் மிகச் சிறந்த படம் எடுத்தவர்கள். இந்தப் படம் ஒரு சின்ன முயற்சி. அதாவது புது வாய்ஸ். இது தற்போதைய நெட்பிலிக்ஸ், யூ ட்யூப் போன்ற பல செயலிகளைப் பார்க்கும் தலைமுறையினருக்கான படம். உலகம் முழுவதும் உள்ள புதிய தலைமுறையினர் நமது கதையையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட படம் இது.

8. விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி குறித்து சிறு அறிமுகம்?

10 ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு ஆவணப்படம் பார்த்தேன். அது எனக்குப் பிடித்திருந்தது. அதை விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்தார். நிறைய விளம்பரப் படம் எடுத்திருக்கிறார். அவர் இசை அறிஞர், சண்டைக் கலைஞர், விளையாட்டு நுணுக்கங்களை அறிந்தவர். அவர் பல திறன்கள் கலந்த கலவையாக இருந்ததால், அதனால் அவருடன் பேசி இந்தப் படத்தை உருவாக்கினோம்.

9.நடிகர்கள் தேர்வில் உங்களுடைய பங்கு என்ன? ஏன் புதுமுகத்தை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது?

இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் இருவரும் இசை கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் ஒரு வருடம் இசைக் கருவிப் பயிற்சி பெற்றனர். பின் அவர்கள் அமெரிக்கா சென்று நடிப்பு கற்றனர். புதுமுகங்களை வைத்துப் படம் எடுத்தால் கால்ஷீட் பிரச்னை இருக்காது. சுதந்திரமாகப் படம் எடுக்கலாம். அதுதான் காரணம்.

10. பலரும் இந்தக் கதை உங்களுடைய வாழ்க்கையிலிருந்து ஒரு பகுதி என்று கருத்துத் தெரிவித்து வருகிறார்களே. அது உண்மையா?

என் வாழ்க்கைக் கதை முற்றிலும் வித்தியாசமானது. நான் இசைத் துறையில்தான் செல்ல வேண்டும் என என் அம்மா கூறினார். ஆனால், பொது வாழ்வில் யாரும் இசைத் துறைக்கு செல்லும்படி தங்கள் பிள்ளைகளிடம் கூற மாட்டர்கள். அரசு வேலைக்கு செல்லும்படி அறிவுறத்துவர். ஆனால் தற்போது இந்தத் தலைமுறை மாறிக் கொண்டிருக்கிறது. என்னுடைய அனுபவங்களில் இருந்து திரட்டிய விசயங்களை வைத்து இந்தப் படத்தில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளேன். அது எப்படி இருக்கிறது? என பார்க்கலாம்.

11.உங்களுடைய இயக்குநர் நண்பர்கள் இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்த்துவிட்டு என்ன சொன்னார்கள்?

நிறையப் பேரிடம் காட்டவில்லை. ஹாலிவுட் படம் போல் இருக்கிறது என இயக்குநர் ஷங்கர் கூறினார். கலை மற்றும் கமர்ஷியல் கலந்த கலவையாக இருப்பதாக அட்லி கூறினார். புதுவிதமாக இருக்கிறது என சிலர் கூறினர். இது மக்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

12.பல்வேறு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறீர்கள். அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் அளவுக்கு இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்ன?

நான் பல மொழிகளில் படங்களில் பணியாற்றியிருக்கிறேன். சில படங்கள் வெற்றி பெற்றன. சில வெற்றி பெறவில்லை. இந்தப் படத்தின் கதை, தயாரிப்பு, இசை ஆகியவை எந்த மொழியில் பார்த்தாலும் மக்கள் விரும்புவார்கள் என நினைக்கிறேன்.

13.இசையைப் பின்னணியாகக் கொண்டு பல்வேறு படங்கள் வெளியாகியுள்ளன. இதில் என்ன புதுமையாக இருக்கும்?

இசைப் பின்னணியில் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. இந்தப் படத்தில் நான் சொல்ல வரும் விசயம் சற்று வித்தியாசமாக இருக்கும்.அதை இப்போதே சொல்லிவிட முடியாது.

14.இந்தப் படத்தின் மூலம் நிறைய அனுபவம் கிடைத்திருக்கும். விரைவில் இயக்குநர் ரகுமானைக் காண வாய்ப்பு உள்ளதா?

இயக்குநர் ஆகப் பல காலம் ஆகும். நிறைய விசயங்களை மனதில் வைத்துப் படம் பண்ணுவதற்கு எனக்கு நேரம் இல்லை. ஆனால் படம் தயாரிக்க ஒரு குழுவை வைத்து கதை எழுதி, ஒரு இயக்குநரை வைத்துப் படம் எடுப்பது எனக்கு எளிதாக இருந்தது.

15. 99 சாங்ஸ் படத்தைத் தொடர்ந்து கதை எழுதும் எண்ணம் உள்ளதா? ஏதேனும் எழுதி வைத்துள்ளீர்களா?

நிறையக் கதைகளை எழுதி வைத்துள்ளேன். ஆனால், ஒன்றைச் செய்தால், அதை ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. முதலில் இந்தப் படம் எப்படி மக்களைச் சென்றடைகிறது என்பதைப் பார்த்து விட்டு, அதற்குப்பின் அடுத்தடுத்த கட்டத்தைப் பற்றி யோசிப்பேன்.

16. ஒரு நேரடி தமிழ்ப் படத்துக்குக் கதை எழுதும் எண்ணம் இருக்கிறதா?

நிறைய தமிழ்க் கதைகள் என்னிடம் இருக்கின்றன. இந்தப் படத்தின் வெற்றியைப் பொறுத்துத்தான் எல்லாமே.

17. ஒரு பாடலில் சில காட்சிகளில் தோன்றுகிறீர்கள். எங்களால் நடிகர் ஏ.ஆர்.ரகுமானைக் காணவே முடியாதா?

இல்லை. நான் என் சொந்த உலகில் இருக்க விரும்புகிறேன். நடித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன். அதனால் அமைதியாக இசை, கதை எழுதவே விரும்புகிறேன்.

18. சமூகவலைதளங்களில் விமர்சனம் என்பது மிகவும் எளிமையாகிவிட்டது. இதைப் பற்றிய உங்களுடைய பார்வை என்ன?

விமர்சனம் வருவது தப்பே இல்லை. முதல் படத்திலிருந்தே எனக்கு விமர்சனம் பழகிவிட்டது. அதில் நல்ல விசயங்களை நான் எடுத்துக் கொள்வேன். மற்ற விசயங்களைத் தவிர்த்து விடுவேன். நாம் உண்மையாக உழைத்திருக்கிறோமா என்பதுதான் முக்கியம்.

Related posts

Leave a Comment