சுவாமி ஐயப்பனின் மகிமை சொல்லும் இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் – தலைப்புகளை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்!!

ஒரு திரைபடம், ஆன்மீகமும் வரலாறும் சங்கமிக்கும் பிரம்மாண்ட பயணம், மற்றொன்று ஒரு ஐயப்ப பக்தரின் வாழ்க்கைப் பயணம் – தந்த்ரா பிலிம்ஸ் அறிவித்த இரண்டு ஐயப்ப சுவாமியின் திரைப்படங்கள்!!

தமிழ் திரைப்பட உலகில் ஆன்மீக உணர்வும் வரலாற்றுப் பெருமையும் ஒன்றிணையும் புதிய முயற்சியாக, தயாரிப்பாளர் JK சரவணா அவர்களின் தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய திரைப்படங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக சென்னை 600028, சென்னை 600028-2 படங்களை இணைத் தயாரிப்பு செய்த தயாரிப்பாளர் JK சரவணா முழுமையாக தமிழ் திரைப்பட தயாரிப்பில் கால்பதித்துள்ளார். சுவாமி ஐயப்பனை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த இரண்டு படங்களின் தலைப்புகளை, பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

“தத் த்வம் அஸி”

தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் முதல் படம் “தத் த்வம் அஸி” (Tat Twam Assi – அதுவாகவே நீ இருக்கிறாய்).
இது சமகாலத்தில் நடைபெறும் ஆன்மீக ஆக்ஷன் திரைப்படமாக, சுவாமி ஐயப்பன் பக்தரின் வாழ்க்கை, அவரது நம்பிக்கை, பக்தி மற்றும் ஆன்மீக பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது.

இந்த திரைப்படத்தை, சுவாமி ஐயப்பன் பக்தியை மையமாகக் கொண்டு உருவாகிய 100 கோடி ரூபாய் வசூலை கடந்த சூப்பர் ஹிட் படமான “மாளிகப்புரம்” படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்குகிறார். ஆன்மீக கதைகளை உணர்வுப்பூர்வமாக திரையில் சொல்லும் அவரது அனுபவம், “தத் த்வம் அஸி” படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ஆர்ய கேரள வர்மன்”

இரண்டாவது திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள “ஆர்ய கேரள வர்மன்”, வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படமாகும். இந்த படம் இதுவரை அதிகம் பேசப்படாத சுவாமி ஐயப்பனின் சுயசரிதை கதை, 16 ஆம் நூற்றாண்டின் வரலாற்றுப் பின்னணியில், அவரது வீரத்தையும் ஆன்மீகத் தத்துவத்தையும் மையமாகக் கொண்டு உருவாகிறது.

இந்த திரைப்படத்தை JK சரவணா மற்றும் ஆதித்யா தங்கிராலா இணைந்து இயக்குகிறார்கள். ஆன்மீகம், வீரம், பண்பாடு ஆகியவை இணையும் ஒரு சக்திவாய்ந்த காட்சிப் படைப்பாக “ஆர்ய கேரள வர்மன்” உருவாகவுள்ளது.

இந்த இரண்டு படங்களின் டைட்டில் அறிவிப்பு நிகழ்வு, ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ராஜா அண்ணாமலை புரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. சென்னை 600028 படம் துவங்கிய இடத்தில், அப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றிய JK சரவணாவின் புதிய படங்களை, இயக்குநர் வெங்கட் பிரபு கலந்து கொண்டு தலைப்புகளை வெளியிட்டதோடு படத்தின் தயாரிப்பு பணிகளை துவங்கி வைத்த இந்த விழா, ஆன்மீகமும் சினிமாவும் ஒன்றிணைந்த நினைவுகூரத்தக்க தருணமாக அமைந்தது.

“தத் த்வம் அஸி” மற்றும் “ஆர்ய கேரள வர்மன்” ஆகிய இரண்டு திரைப்படங்களும் பான் இந்திய அளவில் பிரம்மாண்டமாக பல மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சுவாமி ஐயப்பனை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த இரண்டு படங்களும், ஆன்மீகமும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட முக்கியமான படைப்புகளாக அமையும் என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளடக்கத்திற்கு முதன்மை அளிக்கும் இந்த முயற்சி, வரவிருக்கும் காலத்தில் தந்த்ரா பிலிம்ஸை ஒரு தனித்துவமான தயாரிப்பு நிறுவனமாக நிலைநிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Related posts

Leave a Comment